ஞாயிற்று கிழமை. எத்திசையிலும் வயல்வெளி. நீள்செவ்வக மற்றும் சதுர வடிவில் பச்சை பசேலென வயல்கள். தூரத்தில் மரங்களுடன் நெல்
அடிக்கும் களம். வயல்களின்
வரப்புகள் வளைந்தும், கோணியும் குழந்தையால் வரையப்பட்ட வடிவங்கள் போன்றிருந்தன. வயலில் நெற்கதிர்கள் நன்றாக
முற்றி வயலை செறிவாக நிரப்பியிருந்தன. பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்கள்
பச்சை பசேலென நேராக நின்று காற்றில் ஆடின. சில வயல்களில் பசும்மஞ்சள்
நிறத்தில் அன்னையின் மடியில் படுத்திருந்தன. புற்கள் நிரம்பிய வரப்பில்
ஆங்காங்கே பனைமரங்கள், மஞ்சள் மற்றும் கருணை கிழங்குச்செடிகள். அவர்கள் முன் இருந்த இரு வயல்வெளி
தேசங்களை ஒர் சிறு வாய்க்காலின் தண்ணீர் கை குலுக்கி இணைத்தது. பதினைந்து வயது விஜயபாலனும், அவன் நெருங்கிய நண்பன் அறிவழகனும், பாலனின் சித்தப்பாவை பார்ப்பதற்க்காக
அந்த வாய்க்காலின் வரப்பில் கிழக்கு திசையில் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
இருவரும் நடக்கையில் காற்றின்
அமைதியான சத்தமும் அங்குள்ள சிறு பூச்சிகளை
உண்ணும் கரிச்சான் குருவிகளின் சத்தமும் ஒலித்து கொண்ட வந்தது. நெற்கதிரின் வாசம் பாலனின்
மூக்கை தொலைத்து. அது பசும்புல்லுக்கும், வைகோலுக்கும் இடைப்பட்ட எதோ
அரிதான பால் ஒன்றின் வாசம். சூரிய ஒளி பட்டு மிண்ணிகொண்டிருந்த நல்ல பச்சையாக உள்ள
நெற்கதிரை ஓரு பிடி உருவி அவன் வாயில் போட்டு அரைத்தான் பாலன். நெற்கதிரின் சுனை லேசாக நாக்கை
அறுத்தது. அவன்
மேலும் மேலும் அதை மென்றுத்திங்க அரிசியும், பசுந்தவிடும் அரைப்பட்டு வாயில்
அரிசி பாலாக உறியது. பாலை குடித்துவிட்டு, நெற்கதிரின் சக்கையை வயிலின் ஓரத்தில்
உள்ள வரப்பில் துப்பினான்.
மாரியம்மன் கோவயிலருகே உள்ள
செந்தாமரை குளத்தில் காலை ஏழு மணிக்கு
குளிக்க போன அவர்கள், மணி இப்பொழுது பத்தரையிருக்கும். அவன் மீதும் அறிவழகன் மீதும், தாமரை குளத்தின் சேறு ஒர் மெல்லிய படலமாக படிந்திருந்தது. தாமரைக்குளத்தின் கும்பியை
கிளப்பாமல் அவர்கள் குளியல் முடிய வாய்ப்பில்லை. பாலன் பெரும்பாலும் மேல் சட்டை
போடுவதில்லை, பள்ளிக்கூடத்தில்
கொடுத்த பெரிய காக்கி அரை டவுசர். டவுசர் பின்புறம் நன்றாக தேய்ந்திருந்தது. இன்னும் ஓட்டையாகவில்லை. சிவப்பு
உடம்பு வெயிலில் கருத்து மாநிறமாக இருந்தது. குண்டான கண்ணம், லேசான தொந்தி, இடுப்பை சுற்றி சற்றுமிதமான
சதை. ஊரில் பாலனுக்கு பேர் பால்வாடி. அறிவழகனுக்கு சற்று கடினமான
இறுகிய கருப்பு உடம்பு. அவன் சிறிய கைலியை பாலனின் அரை டவுசர் அளவுக்கு மடித்து
கட்டிருந்தான். வரப்பில் பாலன் முன்னால் நடக்க, அறிவழகன் அவன் பின்னால் தொடர்ந்து
வந்தான். பாலன்
அவ்வப்போது வாயை துப்பிக்கொண்டே வந்தான். அறிவழகன் மீது எச்சில் தெறிக்க
“டேய் வாய முதல்ல கொப்பிளிச்சுத்தொல” என்றான். பாலன் வாய்காலில் ஓர்வாய் தண்ணீர் மொண்டு வாயை கொப்பளித்தான். வாயில் இடுக்கிள் ஒட்டியிருந்த
அனைத்து பசுந்தவிடும் வெளிவந்தது.
வாய்க்காலில் தண்ணீர் அவர்களுக்கு
எதிரே சென்றது. தண்ணீரில், சிறு சிறு மூங்கில் குச்சி, காய்ந்த மரக்குச்சிகள், சருகு, சக்கை, புல் என ஒவ்வொன்றும் சற்று
வேகமாக அவர்களை கடந்தன. கருப்பாக காய்ந்த நத்தை ஓடு
ஒன்று தண்ணீருக்கு அடியில் அங்கபிரதக்சணம் செய்து உருண்டோடி கடந்தது. பாலன் “டேய் அறிவு, விநாயபத்தர் புளிய மரத்துல
புளியங்கா அடிக்கலாமா” என்றான். “டேய் லேட்டாயிடும்” என்றான் அறிவழகன். பதிலுக்கு பாலன் “போற வழிதானட அறிவு” என்றான். “டேய் உனக்கு ஏதாச்சும் அரைச்சிகிட்டே
இருக்கனுமாட" என்றான் அறிவழகன் சற்று எரிச்சலுடன். “இல்லடா நீ வரப்ப அந்த புளிய மரத்த பாத்தியானு தெரியல அறிவு, புளியங்கா நல்லா சாட்ட சாட்டையா
இருந்துச்சுடா, அதும் அந்த செங்காய் செம இனிப்புடா" என்றான் பாலன். இருவரும் பேசிக்கொண்டே
நெல் அடிக்கும் களத்தில் உள்ள புளிய மரத்தடிக்கு வந்தார்கள்.
பாலன் புளிய மரத்தை அண்ணாந்து
பார்த்தான். சூரிய
ஓளி பாலவின் கண்ணை கூசிய அதேசமயத்தில் அறிவழகன் கல்லை மரத்தில் புளியங்காய் அதிகமாக
உள்ள ஓர் பகுதியை நோக்கி வீசினான் அறிவின் குறி தப்பவில்லை. எப்போதும் தப்புவதும் இல்லை. புளியங்காய் சொட சொடவேன வீழ்ந்தது. “சூப்பர்டா அறிவு" என்ற குதுகலத்துடன்
பாலன் புளியங்காய்களை பொறுக்கி தன் டவுசர் பாக்கெட்டில் தினித்தான். அறிவழகன் அருகில் வந்து “உங்க சித்தப்பா எதுக்காகட வந்துருக்காங்க” என்றான். புளியங்காய்களை பொறுக்கிக்கொண்டே
பாலன் “நீ டிப்ளமா படிச்சா சீக்ரம் வேலைக்குப்போலனு சொன்னால அத அம்மாட்ட சொன்ன , சரின்னு, சேத்துவிட சித்தப்பாவ வர சொன்னங்கடா". அறிவு உடனே “டேய் நீங்களே சாப்பாட்டுக்கே
கஷ்டபடர்வங்க நீ எப்படர டிப்ளமா சேர்வ"
என்றான்
ஆச்சரியத்துடன். பாலன்
“தெரியலடா, ஏதாச்சும்... “ என்று முடிப்பதற்க்குள் புளியங்காயை கடித்தான். புளிப்பு பல்லிருந்து தலைக்கேறி
தலையை ஓர்வெட்டு வெட்டியது. திடீரென பாலன் “டேய் பத்தர் வர்ரார்டா வாடா
ஓடிர்லாம்" என்று கத்தினான்.
இருவரும் தெருவுக்குச் செல்லும்
வரப்பை நோக்கி ஓடினார்கள். வரப்பிலும் ஓட்டம்தான். வாய்க்காலின் வரப்பில் களைச்செடிகளும் ஆங்காங்கே உள்ள
கோரைப்புதர்களும், அவர்களை வேகமாக உரசி சென்று கொண்டிருந்தன. பாலனின் காலில்லிருந்து இடுப்புக்கு வரைக்கும் தாமரை குளத்தின்
சேறு படிந்திருந்த சருமத்தில் குச்சிகளும், செடிகளும் உரசி வெள்ளைக்கோட்டு
ஓவியங்களை உருவாக்கி கொண்டேவந்தன. பாலனின் டவுசர் புளியங்காயின் எடையால் அடிக்கடி கீழே இறங்க
அவன் டவுசரை மேல தூக்கி கொண்டே ஓடினான். சூரியனும் தன் பங்குக்கு டவுசர்
அவிளும்போது பாலனின் பின்பக்க அந்தரங்கத்தில் ஒளியை பீச்சி அடித்தது. அறிவு முன்னேவும் பாலன் பின்னயும் பேசிக்கொண்டே ஓரே வேகத்தில் ஓடி தெருவை
அடைந்தனர்.
தெருவில் பெரும்பாலும் கூரை
வீடுகள், சில
ஓட்டு வீடுகள், ஓர்
மாடி வீடு. ஓர் குட்டி சுவரில் இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளி குதித்தன. ஜல்லி மற்றும செம்மண்னாலான ரோட்டில் பாலன் புளியங்காயை
கொட்டையோடு சேர்த்து மென்று கொண்டே டவுசரை தன் இடக்கையால் தூக்கி பிடித்துக்கொண்டு
நடந்தான். தெருவில்
பாலனை பார்த்த மோகனா மாமி சிரித்துக்கொண்டே“வீட்ல கேட்ட காசுல்லங்குதுவோ
ஆனா இந்த பாளையம் மட்டும் ரோட்ல உருண்டுகிட்டுதான்யா போகுது. ஓன்னுவுடம எல்லாத்தையும் புடிச்சு
மாட்டுதுவயா, பாரன் சூத்ல டவுசர் நிக்குதானு” என்றாள். பாலனுக்கு மோகனா மாமி சொன்னது
காதில் விழ சிரித்துகொண்டே ஓடினான். அவனுக்கு தெருவில் அனைவருமே
மாமா,மாமி
தான். பாலனும் அறிவழகனும் வீட்டை நெருஙகினர். வீட்டு வாசலில் சித்தப்பா
பேண்ட் சட்டையுடன் பாலனுக்காக காத்திருந்தார்.
பாலனின் வீடு குடிசை வீடு. வீட்டை சுற்றி ஒர் சிறிய இடம். வீட்டின் கீற்று மாத்தி எப்படியும்
ஏழு வருடத்திற்கு மேல் இருக்கும். ஆங்காங்கே ஒருசில புது கீற்று இடையில் செருகி இருந்தது. இருபக்கமும் மண் சுவர். வீட்டில் நிலை இல்லை. மூங்கில் சட்டத்தால் செய்யப்பட்ட
தட்டி நிலைகதவாக இருக்கி கட்டப்பட்டிருந்தது. வீட்டின்னுள் பாலனின் அம்மா
மூங்கில் கதோவரம் லட்சுமியின் திருவுருவமாய் நின்றிருந்தாள். ஊரில் “கணகவேல் பிள்ளை சம்சாரம் பாக்கமட்டும் ஐயர் இல்ல ஆச்சரத்திலையும்
ஐயர்" என்பார்கள். மறைந்த பாலனின் ஆத்தா மோகனா மாமியிடம் “கும்போணத்தா அவ லட்சுமிடி, இந்த மண்ண பொன்னா மாத்த வந்தவடி” என அடிக்கடி கூறுவாள். பாலன் அவனது சித்தப்பாவை பார்த்து
நன்றாக சிரித்து “எப்படி இருக்கீங்க சித்தப்பா” என்றான்.
பாலனின் சித்தப்பா வாசலில்
நின்ற பாலனை பாசத்துடன் பார்த்து சிரித்துக்கொண்டே “டேய், பாத்த நீ பத்தாவதுல ஸ்கூல்
பர்ஸ்ட் வந்த பையன் மாதிரியே இருக்க, இதுள நீ காலேஜ் வேற போனுங்கறாங்க
உங்கம்மா, சட்டை எங்கடா ” என்றார். பாலன் சற்று வேகமாக ஓடி வீட்டுக்குள்ளே
சென்றான். அறிவு
வீட்டின் வாசல் ஓரமாக நின்றுவிட்டான். அம்மாவை தாண்டி செல்லும்போது
பாலனை முறைத்து “எப்ப போன நீ” என்றாள். அவன் அவளை வேகமாக கடந்து டவுசரில்
உள்ள புளியங்காய்களை எடுத்து வீட்டின் மூலையில் இருந்த அரிசிபானை மீது வைத்தான். வீடு முழுவதும் சற்று மங்கலாக
சூரிய ஓளி வட்ட வட்டமாக கீற்றின் வழியாக ஊடுருவி கொண்டிருந்தது. அரிசிபானையை திறந்த போது அங்காடியில்
வாங்கிய புழுங்கல் அரிசின் நெடி முக்கை துளைத்தது. அவன் ஒருபிடி அரிசியைப் மென்றான். கூசிய பல்லுக்கு சற்று இதமாக
இருந்தது. சித்தப்பா
“காசுக்கு என்ன அத்தாச்சி பண்ணப்போறிங்க" என்பது மெலிதாக அவன்
காதில் விழுந்தது. வேகமாக வாசலுக்கு சென்றான்.
அம்மா பதில் சொல்ல தயங்க பாலன்
வாசலுக்கு வந்து “அம்மா தாலி செயினை வைச்ச போதுமா சித்தப்பா” என்று கேட்டு அறிவோடு சென்று
நின்றான். அம்மா
ஏதும் சொல்லாததால் அம்மா எதிரே நின்ற சித்தப்பா சற்று சங்கடத்துடன் “அது ஒர் செமஸ்டர்க்குதான்
பத்தும் அத்தாச்சி” என்றார். ஓரத்தில் நின்ற பாலன் உடனே
“நம்ம வயல வித்தா” என்று சொல்லி அம்மாவை பார்த்தான். முதலில் குழம்பிய அம்மா சட்டேன்று
சுதாரித்தாள். சித்தப்பா
திடுக்கிட்டு அம்மாவை பார்த்து “அதையும் வித்துட்டு, என்னா அத்தாச்சி..., சாப்பாடு மத்த செலவுக்கு நீங்க
என்ன பண்ணுவீங்க ” என்றார் சற்று உடைந்த குரலில். “நானும் அவரும் நாடு ரோட்டில்
பிச்சை எடுத்தாலும் பரவால்ல, அவன்ட்ட இருக்க சரஸ்வதிய துரத்திடக்கூடாது தம்பி” என்றாள் திடமாக. “அண்ணட்ட ஒர் வார்த்த..” என்று சித்தப்பா முடிப்பதற்க்குள்
“இந்த விஷயத்தில் எப்போதும்
என் முடிவுதான் அவர் முடிவும்” என்றாள் இரும்பு திடத்தில். சித்தப்பா மேற்கொண்டு எதும்
பேசாமல் மனக்கணக்கு போட்டார். “இன்னுமுமே கடைசி வருசத்துக்கு இடிக்கும்போல அத்தாச்சி” என்றார். பாலன் கண்ணில் ஓன்று மிண்ணி
அம்மாவிடம் ஏதோ சொல்ல வாயை எடுக்கும் தருணத்தில் சித்தப்பா முதல் முறையாக அறிவழகனும்
பாலனுடன் ஓன்றாக நின்றிருப்பதை கண்டார். அந்நேரத்தில் நேர்உச்சியிலிருந்த
சூரிய ஓளி தன்முன்னிருந்த சிறு மேகத்தை கலைத்து அந்த இடத்தை முழுபிராகசமாக நிரைத்தது.
கண்ணில் ஈரம்!!
ReplyDeleteபசுமையான நினைவுகள்.
ReplyDeleteநினைவுகள் அழிவதில்லை...
ReplyDeleteSimple but transforming us to the place and giving the feel...
ReplyDelete