Wednesday, March 17, 2021

அடைக்கும் தாழ் - பார்கவி

  

ஆறாவது முறை அழைப்பு வரும் பொழுது எடுத்துத் தான் ஆக வேண்டும் போல் ஆகிவிட்டது. பானு அக்கா தான், ஏதோ வேலையாம், ஒரு எட்டு கிராமத்திற்கு வர முடியுமா என்று கேட்கிறாள். கிராமம் என்றால் சாலிக்ராமம். நடேசன் நகரிலிருந்து என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அந்த உடைந்த சுண்ணாம்புச் சிலை மனிதனின் வீடு வழியாக ஜூபிட்டரை மிதித்தால் வாசு அக்காவின் வீடு வந்துவிட்டிருந்தது. இரு சக்கர வாகனமும் ஆட்டோவும் எதிரெதிர் வந்தால் வாகன நெரிசலாகும் வீதியில் அவள் வீட்டில் மட்டும் மாருதி ரிட்ஸ் ஒன்று, ஒரு பாதி வீட்டின் விளிம்பிலும் மீதி தெருவிலுமாக, சாய்த்து வைத்தப் படகு போல் நின்றிருந்தது.

 

பானு அக்கா வாசலிலேயே காத்திருந்தாள். ஒரு நாளைக்கு எவ்வளவு முறை ஒருவரை குசலம் விசாரிக்கலாம், அவர்களுடைய உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கையின் பொது ஓட்டங்களை பற்றிக் கேட்கலாம் என்பதற்குச் சட்ட வரம்புகள் இருக்க வேண்டும். இல்லை, விஷயத்தைச் சுருக்கமாக சொல் என்பதை பதவிசாக கேட்க எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். "எல்லாம் ஓகே தானே?" என்றேன்.

வினோதமான மணத்தை நுகர்ந்த நாய் போல அவள் விழி காட்டினாள். "நீ அம்மா கிட்ட பேசணுமே, கவி" "அம்மானா மாமியாரா?" "அம்மா. எங்க அம்மா. சமைக்காதேனு சொல்ல சொல்ல சமைக்கறாங்க. மிரட்டிப் பாத்தாச்சு. நீ அவங்க கிட்ட லாயரா பேசணும்." "வயசு என்ன ஆவுது?" "எழுவத்து ஆறு. அவசரம் இல்லை. பொறுமையா தயார் பண்ணிட்டு நாளைக்குக் கூட வரலாம்." உடம்பின் அத்தனை சக்தியையும் திரட்டி சிரிப்பை அடக்கிக்கொள்ளும் வேடிக்கையான தருணம் என்றால் கூட சமாளித்து விடலாம். தன்னையும் மீறி வரும் விரக்தியின் கோணல் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பானு அக்காவின் உள்ளங்கை அவளின் வலது நெற்றியிலிருந்து கண்ணத்தில் இறங்கி, நெற்றிப் பொட்டை மேலும் கீழும் நீவி கழுத்தின் பின் பக்கத்தை அசௌகரியமாக வருடியது. "இப்போவே கூப்பிடு. அத்தைக்கு என் நெனைப்பு இருக்கா?" என்றேம். பற்களைக் காட்டி சிரித்து, "ரொம்ப தேங்க்ஸ். நீ பேசு" என்றபடி பக்கத்து அறையிலிருந்து அன்பு அத்தையை அக்கா அழைத்து வந்தாள்.

 

அன்பழகி அத்தை, நல்லப் பெயர் பொருத்தம். வரும்பொழுதே "அம்மா, பாரு கவிதா வந்திருக்கா. நம்ம வீட்டுல குடியிருந்தாளே? அவ தான். ஹை கோர்ட் லாயர் இப்போ. உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னா" என்றாள் அக்கா. கூர்மையான உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

"கவிதானா? கவிதா-புனிதா வா?" அத்தை கேட்டாள்.

"அம்மா. கவிதா. பெரியவ. வக்கீல்.  நீ சமைக்கறல? அதுக்குத் தான் ஏதோ சொல்ல வந்துருக்கா" அத்தையின் இடைமறிப்பிற்கு நடுவில் அக்கா சொன்னாள்.

"அத்தை, எழுவது வயசுக்கு மேல இருக்கறவங்க சமைக்க கூடாது. உங்களுக்கு தெரியும்ல? பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலம்புரி சட்டம்னு ஒண்ணு ரெண்டாயிரத்து ஏழுல கொண்டாந்தாச்சு. எழுவது வயசுக்கு மேற்பட்டவங்க  வீட்டு வேலை, சமையல் செய்தா வீட்டு மனுஷாரு வயசாளிகளைக் கொடுமை பண்ரறாங்கனு தூக்கி ஜெயில்ல போட்ருவாங்க. வாசு அக்கா உங்கள சமைக்க சொல்லி கொடுமை செய்யுதா? சொல்லுங்க" என்று குரலை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டேன்.

"நீ சட்டம் படிச்சல்லே?" அத்தையின் குரல் நிதானமாக ஒலித்தது.

"ஆமாம், அஞ்சு வருஷமா ப்ராசிட்டிஸ் பண்றேன். அம்மா அப்பாவை கொடுமை செய்யற எத்தனையோ பசங்கள ஜெயில்ல போட சொல்லி நானே போலீஸ் கிட்ட புகார் குடுத்திருக்கேன்."

"எங்க ப்ராசிடிஸ் பண்றே?"அத்தை ஒரு விடாக்கண்டர்.

"ஹை கோர்ட். பாரிஸ். சமைக்கறப்போ டக்குனு தீ புடிச்சுகிச்சுனா? அது வாசு அக்கா தப்பு தானே. உங்களுக்கு எதுக்கு இந்த வயசுல இவ்ளோ வேலை?” நானும் கொடாக்கண்டி தான்.

"வேற என்ன செய்யட்டும்? உடம்பு நல்லா வெச்சிருக்கான் கடவுள். ஏதோ என்னால முடியறத செய்றேன் ராமருக்கு அணிலாட்டம். உமா வேலைக்கு போகும் போது சமைக்க முடியுமா?" வாசு அக்காவை நோக்கி புருவம் உயரத்தினேன். "மறந்துட்டியா, பெரியண்ணன் பொண்டாட்டி" என்றாள்.

"அப்போ வேற ஆள் போட்டுக்க சொல்லுங்க. இல்ல வெள்ளெருந்து வாங்கிக்கச் சொல்லுங்க"

"அது முடியாது" என்றாள் சிறுபுன்னகையுடன் "நான் காலை, மதியத்துக்கு மட்டும் சமைக்கறேன். அவ்ளோ தான்."

"அப்போ உமா அண்ணி, அண்ணன் எல்லாருக்கும் ஜெயில் தான். சட்டத்துல இருக்கு."

"நானா தானே சமைக்கறேன்" என்று நிறுத்தினாள். "பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் லோகஸ், இல்லை?" என்றாள்.

"நீங்களே ஒரு லாயர் தான் போல?" சமாளித்தேன், "எல்லா சட்டமும் அப்படி இல்லே. வீட்டில மனைவியை கொடுமை பண்றது, மூத்தவங்கள கொடுமை பண்றதுக்குல்லாம் லோக்கஸ் அப்படி இல்லை. யாரு வேணா புகார் செய்யலாம்.

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" அத்தை கேட்டாள்.

"பாத்துக்கிட்டிருக்காங்க" பானு அக்கா உதவினாள். "நீ சமைச்சா நாங்க போலீஸ் கிட்ட அடி வாங்குவோம். பரவாயில்லையா?"

"சரி. பாக்கலாம். நான் கொஞ்சமா சமைக்கறேன். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும், வெளிச் சாப்பாடு அவருக்கு ஒத்ததுக்காது," கொஞ்சம் விழித்த படி சொன்னாள். உங்க அப்பா எப்படி இருக்கார், வாசவி?"

"ம்ம். அவர் நல்ல இருக்கார். இப்போ கூட-" பானு அக்கா கையை காட்டி, "நம்ம அப்பா தவறி மூணு வருஷம் ஆச்சு மா" மெல்லமாக சொன்னாள்.

நெற்றிச் சுருக்கி, ஒரு முறை கண்களைச் சிமிட்டி ."தெரியும்" என்றாள் தட்டையாக. மூவரின் மூச்சொலியும், மின்விசிறியின் ஒலியும் துல்லியமாக கேட்டது. அத்தை தான் மௌனத்தை கலைத்தாள், "எனக்கு அசதியா இருக்கு. என்னனு தெரியல"

"நீங்க தூங்குங்க. நாளைக்கு வரேன்" என்றேன். பானு அக்கா அத்தையை பக்கத்து அறைக்குள் கூட்டிச் சென்றாள்.

"திரும்பவும் தேங்க்ஸ்" உதட்டை உள்பக்கமாக மடித்துக் கொண்டு அக்கா சிரித்தாள்.

"இதுல என்ன இருக்கு? நாளைக்கு சண்டே தானே? நம்ம நாளைக்கு திரும்பவும் முயற்சி பண்ணுவோம். இப்போ கெளம்பணும். வேலை இருக்கு" என்றேன்

"ஒரு நாள்ல முடியாது. அவங்க ரொம்ப ஷார்ப்" என்றாள் பெருமையுடன்.

"கவனிச்சேன். அனு எங்-?"

"அவங்களுக்கு அனு இன்னும் கைக்கொழந்தை. பால் குடுத்தியா, படுக்கையை சுத்தி தலைகாணியை அரணா வெச்சியா, கொழந்த கீழ விழுந்துடும்ங்கறாங்க"

"அனு ஸ்கூல் முடிச்சது, காலேஜ் சேர்ந்தது?”

"அப்போப்போ அதுவும் சொல்லுவாங்க. ஆனா இந்த வீட்டுக்கு நாங்க வந்தப்போ அனு கொழந்தை தானே? அதுனால அவ வளரல."

"ஆனா நாங்க அவ கே.ஜி.ல இருக்கிறப்போ தானே வந்தோம்?"

"உன்னை எப்படி ஞாபகம் இருக்குனு கேக்கறியா? தெரியல. கவிதா-புனிதான்னா தெரியும். "

படுக்கையறை ஜன்னலில் திரை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது, அவ்வாட்டத்தில் தெருவிளக்குகள் தெரிவதும் மறைவதுமாய் இருந்தன. காலத்தின் கால்கள் முன்னும் பின்னும் சந்தேகமாக ஆடிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அத்தையை உண்மையில் எனக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது. பாசாங்கில்லாதவர், வெளிப்படையானவர். விடுமுறை நாட்களில் கை கொள்ளாத பண்டங்களை அள்ளி வருவாள். அனுவிற்கு மட்டுமல்ல, எனக்கும் அதில் பங்கு உண்டு. தாம்பரத்திலிருந்து சாலிக்ராமத்திற்கு வருவதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா என்று சில நேரம் யோசித்திருக்கிறேன், நூறடிச் சாலையின் அரவுப்பிடியில் மாட்டிக் கொள்ளும் வைபவத்தைத் தவிர்த்தால் அதில் எஞ்சுவதென்ன?

தினமும் ஆங்கில நாளிதழை மாமாவுக்கு வாசித்துக்காட்டுவாள். இந்த வய்தில் அன்றில் பறவகளா என்று யோசித்திருக்கிறேன். ஊர் கிளம்பும் நாளன்று எங்கள் வீட்டிற்கு வந்து அத்தையும் மாமாவும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா என்னை அழைத்து காலில் விழுந்து கும்பிடச் சொல்வாள். மாமா இறந்த பின் அத்தையை நான் கிராமத்தில் காணவில்லை. அவள் மாறிவிட்டாள் என்றாள் பானு அக்கா. திலீப் பிரிந்த பின் என் வாழ்க்கை ஆனது போல.

சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது சக மாணவனை ஒருவன் இரும்புத் தடியால் அடித்து விட்டான். அத்தாக்குதல் மாணவர்களுக்குள் அப்படியொன்றும் பெருஞ்சலனத்தை உண்டு பண்ணவில்லை. சட்டக் கல்லூரி விடுதிகளில் இதைவிட மோசமான சம்பவங்கள் நடக்கக் கேட்டிருக்கிறோம். கல்லூரி வளாகத்திற்குள் பெண்களிடம்  ஆபாசமாக பேசி வழியும் சீனியர்கள் இருந்தனர். பொழுது போகவில்லை என்றால் கையில் சிக்கும் பெண்ணைப் பிடித்துச் சுயம்வரம் நடத்திக் கொள்வார்கள். இல்லையா, ஈழத் தமிழர், உதவித் தொகை உயர்வு, இலஞ்ச ஒழிப்பு என்று கோஷமிட்டு வகுப்புப் புறக்கணிப்பு நடக்கும். சில நேரம் நடத்துனர் சட்ட மாணவனை மரியாதை இல்லாமல் சீட்டு எடுக்க சொல்லி விட்டார் என்று பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தே அன்றைய போராட்ட வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள். இதை எல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டால் ஐந்து வருடங்கள் படிக்க முடியுமா?

ஆனால் அந்த இரும்புத் தடியன் பட்டப்பகலில், காவலாளி கதவின் மறுபுறம் நிற்க, காமெராக்கள் படம் பிடிக்கும் நேரத்தில் அடித்துத் தொலைத்தது பேரிடர். ஒரு நூறு வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் கல்லூரியை செயதித் தொலைக்காட்சிகள் கண்டு பிடிக்க ஒரு மாணவன் மரண அடி வாங்க வேண்டியிருந்தது. நன்று. ஆனால், இப்படிப் பட்ட விசேட கல்லூரி மரபில் வந்த பெண்ணிற்கு உடனடியாகத் திருமணம் செய்வித்தால் தான் பாதுகாப்பு என்று அப்பா நினைத்து விட்டார்.

அன்பு அத்தையும், பானு அக்காவும் கூட வந்திருந்தார்கள். "இவ்ளோ சீக்கிரம் ஆகும்னு நினைக்கல" என்றாள். "அமைந்து விட்டது" என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? உண்மையில், வாழ்க்கையில், இயற்கையில் எல்லாம் அமைந்து விடுகிறது. நான் பெண்ணாக இருப்பது போல. திலீப் ஆணாக இருப்பது போல. திலீப் ஆணாக இருந்து ஆணைக் காதலிப்பது போல. அவன் சொன்னதும் நான் புரிந்து கொண்டேன். நகையை விற்றுத் தனி வீடு எடுத்தேன். வக்கீலாக பதிவு செய்வதற்கு முன்பே என்னுடைய மணமுறிவு மனுவை நானே தயார் செய்தேன். பதிவு செய்தாலும் தன்னுடைய வழக்கிற்குத் தானே கறுப்புக் அங்கியணிந்து ஆஜர் ஆகக் கூடாது என்ற நடைமுறை வழக்கம், குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி என்னை வாதியாகக் கேள்வி கேட்கும் பொழுது சிறப்பாகப்பட்டது.

இரண்டாம் தாரச் சந்தையில் எனக்கான ஆணை வலை வீசித் தேடும் படலம் ஓடும் தண்ணிலாரியின் மூடிய குழாயிலிருந்து கசியும் போலித் தூறல் போல துளித்துச் சொட்டிக் கொண்டிருக்கிறது. வார இறுதி ஆனால் பணக்காரக் காபிக் கடையில் யாரையாவது சந்திக்க ஏற்பாடாகி இருக்கும்.

 

வளை குலுங்கும் சத்தத்தைக் கேட்டு சிலிர்த்து எழுந்தேன். மழையா? தலையணையை வைத்துக் காதை மூடியதால் ஏற்பட்ட வெற்றிடத்தின் ஒலிமயக்கு. மணி நாலரை தான் ஆகியிருந்தது. கனத்த சிறகுடைய பறவை ஒன்றுத் துயிலெழுவதைப்போல நகரம் உயிர் கொள்ளத் தொடங்கி விட்டது. ஏழு மணிக்கு ஒவ்வொரு இறகிலிருந்தும் ஒரு பட்டாம்பூச்சி எழுந்து வந்தது. ஒன்பது மணிக்குள் டைனோசர்கள் விழித்துக் கொண்டன. பத்து மணிக்கு நான் சாலிக்ராமத்திற்குள் நுழைந்து விட்டேன். பானு அக்காவின் பல்லவிகளுக்கு நான் அனுசரணையாக பின் பாட்டுப் பாடினேன். அன்பு அத்தை என் திருமணத்தைப் பற்றிக் கேட்டாள். நான் அவர் சமைத்தால் பானு அக்காவை தூக்கில் இடுவார்கள் என்று சொன்னேன். அத்தை கனைத்துக் கொண்டாள், பின்வாங்கி விட்டார் என்று எண்ணிக்கொண்டேன்.

"அவர் பிலாய் ஸ்டீல் பிளான்ட்ல வேல செய்யறப்போ, அங்க ஒருத்தன் தூக்குல நெய் கொண்டு வருவான். நாங்க அவனை கிருஷ்ணானு தான் கூப்டுவோம் " என்றார்.

எப்போ?” என்றேன் சலிப்புடன். பின்வாங்கிக் கொண்டார்.

"எனக்கு கல்யாணம் ஆனா புதுசுல. ஐ வாஸ் நைன்டீன்.  உனக்கு வரன் பாக்கறாங்களா?”

"ம்ம். உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியுமா?"

"பேசவா? எழுதி வாசிக்கவே தெரியும். ஹிந்தி, மராட்டி, மலையாளம், கொஞ்சம் கன்னடம் கூட தெரியும்!" என்றார் அகலமாக சிரித்துக் கொண்டே.

"ஸச் முச்?” என்றேன்.

பெரிய சிரிப்பொன்றுடன், பொய் சொல்வோரை காக்கை கொத்தும் என்றார் ஹிந்தியில். பானு அக்கா எங்களை வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது போல் முறைத்தாள்.

எனக்கு அது பிடித்திருந்தது. வழக்கமாக்கிக்கொண்டேன். ஒவ்வொரு முறை நான் சந்திக்கும் பொழுதும் அத்தை தன் நினைவு பெட்டகத்தை திறப்பாள். அது இன்னது, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

"வெள்ளம் வீட்டுக்குள்ள வரப்போகுது. நம்ம மேல போலாம்" என்று ஒரு நாள் மல்லுக்கட்டினார். மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு கொளுத்தும் வெயிலில் நின்ற பின்னும் மழை பெய்யவில்லை என்று அவள் நம்பவில்லை. "பாலத்த ஒடச்சிகிட்டு மழை வருது. நான் பாத்தேன்" என்றார் குரலை உயர்த்தி. "அது பேர் என்ன?  துவாரகை மாதிரி. சுனாமி மாதிரி. வெள்ளம்!" அவர் கண்களில் தெரிந்த வலி உண்மை எனப் புரிந்தது. "கிண்டி, கிண்டி மேம்பாலத்து மேல தண்ணி, வாசவி. நீ பார்க்கல?" என்றார் பரிதாபமாக.

2015 முடிந்து விட்டது. வெள்ளம் வடிந்து ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டன என்பதை எங்களால் நம்ப வைக்க முடியவில்லை. அதனால் எந்த நட்டமும் இல்லை. மகரந்த்த தூள் போல எங்கெங்கோ ஒட்டி இருக்கும் நினைவுகள், ஒலிகள், காட்சிகளால் ஆன வெளியில் அவளோடு சேர்ந்து நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். அங்கு எல்லாமே சுழற்கதவுகள். உன் பேர் என்ன? இப்போ நாம என்ன சொல்லிக்கிட்டிருந்தோம்? நீ என்ன பன்றேன்னு சொன்ன?” என்பாள். பூமி மறுபடியும் தன் சுழற்சிப் பாதையில் வந்து விடும்.  நான் கிளம்பும் பொழுது ஆளுக்கு ரெண்டு கொடத்தை எடுத்துட்டு போய் நில்லுங்க என்றாள். வருடம்: 1998, மணி: காலை ஐந்து முப்பது, இடம்: கீதா அத்தையின் ஒண்டுக்குடித்தன வீடு, கொரட்டூர், வேலை: லாரியிருந்து தண்ணீர் பிடிப்பது." என்றாள் பானு அக்கா இயந்திரக் குரலில். யாரும் சிரிக்கவில்லை.

நினைவுப் பிசகு இருப்பவருடன் நேரம் செலவிடுவதற்கும், அவருடனே வாழ்வதற்கும் வேறுபாடு இருக்கிறது ஒரு முறை நான் கிளம்பும் போது என்று பானு அக்கா சாடையாகச் சொன்னாள். வார இறுதியில் ஒன்றில் அதை சோதித்துப் பார்க்க திட்டமிட்டேன். காப்பிக்கடை கனவான்களின் உலகங்களை விட அன்பு அத்தையின் உலகம் விசாலமாக இருந்தது. பொய்யாக இருக்கும் உண்மையை விட உண்மையாக இருக்கும் பொய் சுவாரஸ்யமானது. நானும் என் நினைவுப் பெட்டகத்தைத் திறந்து காட்டினேன், அவள் மனம் ரகசியம் காக்கும் என்ற நம்பிக்கையுடன்.

வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு அத்தையை அழைகத்து வரச் சென்றேன். "ஆகாரத்துக்கு அப்பறம் சாப்பட்ற மருந்து சாப்பிடணும்" என்று பானு அக்கா பையைச் சுட்டினாள். வண்டியில் ஏறிய மறு நொடி, "இது என்ன ஊர்" அத்தை தொடங்கி விட்டாள். "சென்னை தான்" என்றேன். "அப்போ பீச் எங்க?" "இருக்கே" "மஹாபலிபுரம்?" "இருக்கே" வீட்டிற்கு வந்து, "அதான் எங்க?" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. "அங்க ஒரு மகிஷாசுரமர்தினி இருக்கா"

 "ரொம்ப அழகான சிலை"

"அது சிலை இல்லை, வாசவி, சிற்பம். புடைப்புச் சிற்பம். ஒரு குகைக்குள்ளே. மகிஷனை அழிக்கற தருணம். சிங்கத்து மேல தேவி சர்வாயுதபாணியா வரா. மகிஷனோட படை கிட்டத்தட்ட அழிஞ்சு போச்சு. சர்வநாசம். தேவியோட படைத் தலைவிகள் அரக்கர்களை அழிச்சுகிட்டிருக்காங்க. முன் கையில வில்லை வளைச்சு உடம்பை தந்தி முறுக்கின வீணை மாதிரி தேவி மிதக்கிறது தான் தெரியுது. ஆனா அம்பு இல்லை அங்க! அந்த வில்லில் இருந்து அம்பு புற்பட்டுருச்சு. மகிஷன் கதையை தன் வலுவான கையிலருந்து மாத்திக்கிட்டான். உடம்பு பக்க வாட்டுல திரும்பி காலை மடக்கிட்டான். தோல்வி பயம் அவன் முகத்தில ஏறிடுச்சு! அவனே தோல்வியின் சின்னமா மாறிட்டான். தேவியோட வில்லுலேருந்து அம்பு புறப்பட்டு, அதை பார்த்து, பயந்து ஓட எத்தனிக்கிற மகிஷனோட அந்த ஒத்தை நொடிய, அந்த வெற்றித் தருணத்தை, சிற்பி பார்த்திருக்கான் பாரு! அசைவுகள் உறைந்து ஒரு தருணம்!"

நான் கண்கள் இமைக்கவில்லை. "உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"

"தாம்பரத்திலிருந்து போவோமே நம்மல்லாம்? மறந்துட்டியா, வாசவி?"

"நான் வாசவி இல்ல, அத்தை" என்றேன் எரிச்சலுடன்.

"வாழ்க்கைக்குத் துணை  இருக்கணும்-”

தேவிக்கு வில்லு மாதிரியா?" என்றேன் அடுத்து அவள் பேசுவதற்குள்.

கல்யாணம் அவசியம் இல்லை

"என்னது?" என்றேன் கணிகள் அகல.

"நான் காலைலேருந்து சாப்பிடவே இல்லை, ஏன்?" அத்தை என்னை குழப்பத்தோடு நோக்கினா.ள் 

"நான் பொய் சொல்லிட்டேன், அத்தை. மன்னிச்சுடுங்க" என்றேன்.

"எனக்குத் தெரியும்,” அத்தையின் முகத்தில் இருந்து கருணை மடை திறந்து பீறிட்டது.         

 

 

 

 

 

 

 

 

 

முப்புரம் ஓடிதல் – பார்கவி

 

பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள். அது ஒரு பொருட்டா?

தன்னை வெறுப்புக்கு அப்பாற்பட்டவள் என்று கண்ணகி என்றும் எண்ணியதில்லை. ஆனால் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெயரிடப்படாத விருப்புகளும் மிகைமதிப்பீடு செய்யப்படும் வெறுப்பும் கலந்தது தான் வாழ்க்கை. ஏன் என்ற வினா எழும் போதே ஆம் என்று விடையெழும் போது வெறுப்பு எடையழக்கிறது, தாழ்ந்து பணிகிறது, சிலையில் எடையிழக்கும் கருங்கல் போல்.

ஆயின், வெறுப்பென்பது அன்பின் வேறு வடிவம், அன்னை கொற்றவை ஆதல் போல. வெறுப்பைத் துறத்தல், இருப்பைத்  துறப்பதன் முதல் நிலை. இருப்பைத் துறக்க எண்ணியவர் இல்லைத் துறப்பார் என்பது விதி. மாசாத்துவானால் அதை ஏற்க முடியவில்லை. சேடிகளை விட்டு “அவள் நாட்டியப் பேரரசி, அருமணி, அழகி” என்று புகழச் சொன்னார், கோவலன் “வம்பன், எளியன், கொடியன்’ என்று இகழச் செய்தார். கண்ணகி சினம் கொள்ளவில்லை, மகிழவும் இல்லை. “ஆறு வற்றிவிட்டது” என்றார் மாசாத்துவான். சேடி பணிந்து, ‘கடல் பின்னடைந்து விட்டது” என்றாள்.

அவளுக்குச் சினம் கொள்ள அத்தனை உரிமையும் இருந்தது. பொன்னும் பொருளும் நிலமும் அளவில் சிறுத்துவிட்டன. எனவே நாடி வருவோரும் குறைந்துவிட்டனர். தோழிகளும் சேடியரும் நிறைந்து ததும்பிகொண்டிருந்த இல்லில் ஒரேயொரு அணுக்கத்தோழியைத் தவிர வேறெவரும் எஞ்சவில்லை. பெண்மக்கள் பலர் வாழ்ந்தொதுக்கிய அகத்தின் எச்சங்கள் நீராடிய பின்னும் விழிக்கடையிலிருந்து விலக மறுக்கும் மைத்தீற்றலாய் அங்கு எஞ்சி நின்றது.

எவ்வளவு வாரி அள்ளினாலும் துண்டுப்புகை போல் எங்கிருந்தோ சுருண்டு முற்றத்திற்குள் நுழையும் ஒருத்தியின் உதிர்ந்த மயிர், இன்னொருத்தி மறந்து கழற்றிய வளையல், கதவிடுக்குக் களியில் ஒட்டிய நறுஞ்சாந்து, பாதத்தில் தட்டுப்படும் சிதைந்த முத்து, கேட்பாரன்றிக் கிடக்கும் மர விளிம்பில் வெள்ளிப்பூணிட்டுத் திருகிய ஆடியும், அதில் பிரதிபலிக்கும் கண்ணகியும்.

முன்னர் அரசியர் நிரையிலிருந்த சேடி தெரிவித்து வற்புறுத்தி கண்ணகி பெற்றது. பொன்னை மாசற்றதென்று, முத்தை வலம்புரி என்றும் வணிகம் செய்யலாம், ஆடியை எப்பொருளுக்கு இணை வைப்பது என்று விளங்காமல் அது கண்ணகியின் அறையில் அப்படியே நின்று கொண்டிருந்த்தது, காலத்தின் செங்குத்தான நதி ஒன்றைப் போல.  

ஊழிக்கால நதி போல் காலம் தடங்கல் அற்றது, தடங்கல் அற்றவை கருணை அற்றவை. கண்ணகி தன் கருமையான தடித்த விரல்களை மரச்செதுக்கல்களின் மீது ஓடவிட்டாள். மரமலர்களை, மரமொட்டுகளை. மரக்கொடிகளை, அதில்அசையாது ஆடும் மரஇலைகளை, அதை வானிலிருந்தென பிடித்ததுத் தொங்கும் சாலபஞ்சிகை தேவதைகளை அவள் கைகள் தொட்டுணர்ந்தன. தன் பிம்பத்தை மற்றும் தவிர்த்தவளாய், ஆடியில் முகம் புதைத்து நின்றாள். கடைப் பார்வையில் ஒரு பிம்பம் தெரிந்தது - சற்று அகண்டு புடைத்த நுதல், எரிகரியிலிருந்து எடுத்து பதித்த உருண்டைக் கண்கள், கனத்த அதரம், மென்பட்டுக் கருந்தோல். பழக்கபட்ட அந்த பிம்பத்தில் ஏதோ ஒன்று பிழைப்பது போலிருந்து. திகைத்து, ஆடிப்பரப்பிலிருந்து உடலைப் பிய்த்து ஏறிந்து நேர் முன்னால் நின்று நோக்கினாள், காணமுடியவில்லை. மீண்டும் ஆடியினருகில் முகம் வைத்த போது சாலபஞ்சிகையின் காதணிச்செதுக்கு தனக்கு அணியாவதைக் கண்டாள். ஏன் என்ற சொல் யார் என்றானது.

"மா!" என்று எழுந்த நெடுமூச்சு "தவி" என்று முடிக்கும் போது கன்னத்தில் நீர்த்து வடிந்தது.

மூடிய சாளரத்தை மீறும் பொன் நாழிகை வெய்யொளி ஆடியில் விழுந்து அவள் ஆடிப்பாவையை எரித்துக்கொண்டிருந்தது. முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை எழுவதை அவள் ஆடிப்பாவையாகவே மாறிக்கண்டாள். அந்தப்புன்னகை அன்றிப்பிற அணிகளைக் களைந்தது நினைவிலெழுந்தது.

அம்மாவின் பார்வையில் படும்படி அமர்ந்து கொண்டே சென்று அணிந்திருந்த அணிகலன்களை உச்சந்தலையிலிருந்து ஒவ்வொன்றாக கழற்றினாள்.  மேகலையை எடுக்கும் போது “தெய்வத்துக்கு அடுக்குமா?” என்றாள் கிழத்தி பொறாமல். ‘தெய்வமும் உண்டு கொல்?’ என்று எண்ணிக்கொள்ளும் போதே, அம்மா அவள் கையைப்பற்றிக்கொண்டாள். "என்ன இது? கொழுநன் வாழும் போது? களையதலாகுமா? பத்தினிப் பெண்ணா நீ? அம்மா கோர்வையற்று பதறினாள். ஒன்றும் கூறாமல் கண்ணகி தன்  சிலம்புகளைச் சுட்டி, " போதும்” என்றாள். ‘மாதவியிடம்…’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்து அம்மா முடிக்கவில்லை.

‘மாதவி’, ஒரு மாயப்பொற்கொடி போல அப்பெயர் அவள் மனதைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்தது. அதை விலக்க அக்கொடி தடித்துப் பெருகி அவளை நெருக்கிக்கொண்டிருந்தது. ஆடிப்பாவை ஏளனச் சிரிப்பிலிருந்து கருணைப்பார்வையை தெளித்துக்கொண்டிருந்தது. இப்புவியில் பெருங்கருணையைவிட சலிப்பூட்டுவது ஒன்றுமில்லை. கருணை பிடரி வளைந்து முலை கனிந்து இடை பெருத்து விழி நீர் கசிய அமர்ந்திருப்பது. குரூரம் நிமிர்வு கொண்டது, கட்டுடைத்திருப்பது, இடை ஒசித்து, விழி சிமிட்டித் தொடர ஆணையிட்டுத் தான் பறந்து கொண்டிருப்பது.

சாலபஞ்சிகையை ஓர் அன்பிலாத துணைவனப்போல் இயல்பாகக் கடந்து தன் நகைப்பெட்டியைத் திறந்தாள். மூங்கில் குடுவை தட்டுப்படவில்லை. துழாவலில் மரக்குடுவை அகப்பட்டது. மங்கல அணிக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட குடுவை, அம்மா தந்தது. அதை பற்றி எடுத்து மரச்சட்டகத்தில் மாட்டி மூடியைத்திறந்தாள். பாரம் தாங்காமல் குடுவை ஒரு பக்கமாக சாய்ந்தது. அட்டிகையும் கொலுசும் நெற்றிப்பட்டையும் எட்டிப் பார்த்தன. வைரக்கல் பதித்த பொன்னரவம் பெருகுவது போல் அதன் பிம்பம் அறையை நிறைத்திருந்தது.

இரட்டை நாகங்கள் போல் பட்மெடுத்த தாலிக்காசின் ஊடாக அவள் ஒன்றைக்கண்டாள்.

 

பித்து நிலையில் பக்காவாட்டில் ஆடிக்கொண்டே கோவலன் பாலைப் பண்ணை யாழ் கூட்டிப் பாடிக்கொண்டிருந்தான்.  கண்ணகியின் கால்கள் கொடுங்காற்றில் சிக்கிய கொடி போல் அவசரமாக தாளமற்று அசைந்துகொண்டிருந்தன,. சில்பம்பொலி எழாமல் இருக்க காலைப்பொத்திக் கொண்டாள். பாடல் முடிவதற்குள் வாசலில் நிற்கும் யாசகர் பொறுமையிழந்து செல்லாமல் இருக்க வேண்டும்.

பொருந்திய தோளும், அழைக்கும் விழிகளுமாய் ஒரு தேவதை அவளை அழைப்பது போலிருந்தது.

பாலைப்பண் விளம்ப காலத்தில் இசைக்கப்படுவது. இளமதியம் பின்சூட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பொதிமாடு. அவன் தெய்வங்களுடன் உரையாடும் கந்தர்வன் போலிருந்தான். மிளகாய் வைத்தரைத்தது போல அவளுக்கு உரைத்தது.

பவழமும் மரகதமும் சேர்த்துக் கட்டிய ஒட்டியாணத்தை இடையில் அணிந்து, தன் நூற்சேலையில் விசிறி மடிப்புகள் வைத்து அதை ஆடலுக்குரிய உடையாக சாலபஞ்சிகை மாற்றிக்கொண்டாள்.

ஒரு நொடிப்பொழுதில்என்று கெஞ்சலுடன் குரலெழாமல் சொல்லிக்கொண்டே கண்ணகி எழப்போனாள். சிலம்பசைந்து பரலிசை எழுந்தது. கோவலனில் விரல்கள் யாழிலிருந்து பிரிந்தது. அவன் சீற்றத்தை அவள் எதிர் நோக்கியிருந்தாள்.

வெண்பட்டு அங்கவஸ்திரத்தை மார்புக் கச்சையாககட்டிக்கொண்டாள் தேவதை.

அவன் இதழ் வளைந்திருந்தது. “அவல் பலாவாகாது” என்றான்.

கற்பத்தித்த அட்டிகைகளும், முத்தாரமும், மணி மாலைகளும், காசு மலையும், இரத்தின வங்கிகளும் அவளை ஒரே நேரத்தில் பொற்கவசமிட்ட அரசனைப் போலும், முத்தங்கியிட்ட கொற்றவையைப் போலும் மிளிரச்செய்தது. கண்ணுக்கு அஞ்சனமும், உதடுகளுக்கு செம்மாதுளைச் சாறும் தடவிக்கொண்டாள்.

 

புறத்திலிருந்து வரும் யாசகனின் குரல் கேட்டு கண்ணகி சோற்றுக்கலயத்தை நோக்கி விரைந்தாள்.

"மாதவி...நீ மெய்யாகவே பேரழகியடி!" என்றது சாலபஞ்சிகை.

அவள் காலைச் சுட்டி , தலையை பக்கவாட்டில் அசைத்து நகைத்துக்கொண்டே “அடுத்த தலைக்கோல் உனக்கே"  என்றான்.

தலையும், தோளும், இடையும் லேசாக ஒசிந்து, முப்புறம் ஒடிந்த வாகில், ஒருகரம் பாதி மலர்ந்த மலராகவும், மறுகரம் அதில் தேனுண்ணும் வண்டாகவும், இமை தீய்ந்து கவிழ்ந்தும், இதழ் மலர்ந்தும் ஒயிலாக திரிபங்க நிலையில் நின்றிருந்த இயக்கியை யாரும் பார்க்கவில்லை. சிலம்பணிந்த அவள் பாதம் இலேசாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ கோவலன் கேளாத பழைய இசை மிதந்து வந்தது.

 

விழிநீர் தளும்ப நின்றிருந்த கண்ணகியின் முகத்தைக் காணாது கிளம்பினான்.

தேவதை, தன் விரிந்த குழற்கற்றைகளை யாழென மீட்டி முணுமுணுத்தாள். தன் செவிகளுக்கு மட்டும் கேட்கக்கூடிய லயத்திற்கு அவள் கால்களை நீட்டியும் நாட்டியும், தத்தியும், தாவியும், மெய் நெளிந்தும் அசைந்தும் ஆடினாள். ஆட்டத்தின் உள்வழிகளை இயக்கி வகுத்துக்கொண்டிருந்தாள்.

மூன்று மூன்று அடிளாக சீரான தாள்கதியில் கால் பதிந்த போது திஸ்ர கதியில் ‘மா த வி’ ‘மா த வி’என்று  என்று சிலம்பு கனைப்பதை அவள் அறியவில்லை.

தெரிந்த குரலொன்று ஆழியின் ஆழத்திலிருந்து "என்னை ஏற்றுக்கொள். தாழ் திற!" என்றான் கோவலன். குறுங்கண் சாளரத்தின் வழியாக அக்குரல் நூறு ஒலித்துகளாக உடைந்துடைந்து பெருகி அவ்வறையை அடைந்தது.

கண்ணகி மரவேலைப்பாடமைந்த அந்த ஆடியை ஒருமுறை உற்று பார்த்துக் கொண்டாள். தணிந்த கண்களும், மின்னும் கார்முகமும், புன்னகையில் விம்மி வெடிக்கும் இதழ்களும் கொண்ட இளைய இருள் மீது அவள் நோக்கு பதிந்தது. உடலை எம்பி குளிர்ந்திருக்கும் ஆடிப்பரப்பின் மீது சாய்ந்து வளைக்கரங்களால் பிடித்துக்கொண்டாள். சாலபஞ்சிகையின் மலர் கரங்கள் மெல்ல தளர்ந்து மொட்டாவதை பால்நிலவு பார்த்துக்கொண்டிருந்தது. ஆடிச்சிவந்த பாதம் தரைபட கண்ணகி கதவை நோக்கி நடந்தாள்.