Tuesday, March 1, 2022

பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

 

                                      

1

 

முன்பொரு காலத்தில்

பச்சையும் பனையுமாயிருந்த

நிலத்திலிருந்து

கட்டை விரலாய் விரியும்

சப்பாத்திக் கள்ளியைக்

கொணர்ந்திங்கு வந்தோம்

வெம்மை வேண்டுமதற்கு

வாடையான காற்று ஆவதில்லை

நீரற்றுப் போகும்

உலக இறுதிக் கோடையில்

ஒற்றைக் கனி வேண்டினோம்

மழை தீரும்

நாளொன்றில்

அது விரிக்கும்

ஒற்றைச் செம்மலரை

மலைச் சுடர் நோக்கும்

சிறு பிள்ளை பாவனையில்

தரிசிப்போம்

 

 

 

2

 

காற்றுக்குக் கலையும்

மேகத் திட்டென

திரியாது பேசியவன்

சட்டென்று நிறுத்திக் கொண்டான்

முகம் உதைக்கும்

மிருது பாதங்கள்

கரட்டில் பழகி

உறுதிப்பட்டிருக்கின்றன

வார்த்தைகளைத் திரட்டி

பந்தெனவாக்கி

உதைக்கத் தந்தான் கால்களுக்கு

கூப்பிடக் கேட்காத தொலைவில்

விழும் அது

பச்சைப் பிள்ளையின் குரலால்

அழுதுகொண்டு நடக்கத் துவங்கியது

 

 

3

 

சுவரில் மோதித் திரும்பும்

ஒரு பந்து

கைக்கும் சுவற்றுக்கும்

பெருவெளியின் இரட்டிப்பை

வீச கடந்திடும்

அதே உச்ச வேகத்தில்

திருப்பி எறிகிறது சுவர்

முறுக்கேறிய என் கரமே

சற்று வழு குழைய வீசு

அந்த சுவருக்கு உண்டு

உன்னிலும் மேலதிக ரோசம்

மற்றும்

சமன்பாடுகளும் அதற்கு தான்

வக்காலத்து

 

 

4

 

வயலோர வரப்புகள்

வயிற்றையும் சேர்த்தே அணைத்தவாறு

வரப்பின் மார்பில்

குஞ்சங்களாய் கட்டப்பட்டு

அடுக்கும் நாற்றுகளில்

விளைந்திராத நெல்மணிகளைக்

கொத்திப் பறக்குமொரு

செம்போத்துக் குருவி

பசிக்கும்

மறந்து வற்றிய

சதைத் துண்டத்துக்குமிடையே

உழாத நிலக் கீறலாற்ற

பச்சைக் கண்களால்

விதைத்துக்கொண்டே இருக்கும்

 

5

 

வழி தப்பிய நாய்க்குட்டிக்கு

எறும்புச் சாரை புற்று திரும்புதல்

வேடிக்கையாயிருக்கிறது

வாலைக் கவ்வத் துடித்து

தோற்கும் நீட்டல் நக

பஞ்சு பாதங்களால்

புற்றைக் கலைத்துப்

பொழுது போக்குகிறது

குரைப்பிழந்த வீடு

குறையுறக்கத்தில்

சாலை நோக்கி ஊளையிடுகையில்

ஒன்றோடொன்று சந்திக்கும்

விளக்கற்ற முனையிலிருந்து

திரும்புதல் சாத்தியமிலா

பாதை நீளத் தொடங்குகிறது

 

6

 

வெளி மொத்தமும்

மேய்ச்சல் நிலமாய்

பனிநீர் கனக்கும் புல்லை

அதக்கி கடவாயில் ஒடுக்கும்

எருமையின் திமிலேறி

அமர்கிறது ஒரு காகம்

சிலுப்பலொன்றுக்கு மேலெழுந்து

மீண்டமர்ந்து

மேலெழுந்து மீண்டமர்கிறது

நீர் விட்டு எவ்வி

நீரையே தொடும்

தவளைக் கல்லில்

ஒரு காகத்தின் எச்சம்

கரையாது படிந்தேயிருக்கிறது

 

7

 

குருடான நகரத்தின் சாலையோரம்

விரல் பிள்ளையை

கைமாற்றிக் கை மாற்றிப்

பிடிக்கிறாள்

ஒரு பந்து விளையாட்டு போல்

கொதிப்படங்கிய பாதை

மூச்சடைக்கும் நேரம்

விளக்குப் பரிமாற்றத்தினூடே

கொலை

நடந்தேறுகிறதைப் பாருங்கள்

 

8) நித்தியம் (எ) டாமி

 

வால் குழைய

தோளுக்குத் தாவும் 

நித்தியத்தை 

கிணற்றுக் கரையில்

புதைக்கத் தலைபடும் நாளில்

எவரும்  புத்தனாவதேயில்லை

 

9) ONCE UPON A TIME IN EAST

 

வெகுதூரம் ஓடி வந்த

பேருந்து முன் நின்றது

எதோ ஒன்றை

தவறவிட்ட நியாபகத்தில்

பின் வாயில் ஏறி

முன்னது பக்கம் அமர்கிறேன்

கரைவேட்டிக்காரரொருவர்

நெட்டி இழுத்து

சீட்டை விட்டிறக்கினார்

அவர் கைக்குட்டையால்

முன்பதிவு செய்திருந்த இடம் போல அது

பெரிய மீனை

விசிலால் விரட்டுபவர்

முகத்தைத் திருப்பிக் கொண்டார்

முன் வாய் வழியிறங்கி

விட்டு வந்த ஒன்றைத்

தேடி எடுக்க

அதே குடைக்கு

மீண்டும் விரைந்துகொண்டிருக்கிறேன்

 

10

 

பாதி பழுத்த ஆப்பிளை

நறுக்கும் கத்தி

நரம்புகளை விட்டு

கரிசனமாய்

விரலைக் கீறுகிறது

கூரற்ற பின்புறம்

வழியும் திரவத் துளி

நன்கு பழுத்த

மாதுளை போல

மதுரமாயிருக்கு

தொண்டைக் குழி தாண்டிய

ஒன்றின் ருசியை

மீட்டெடுக்க தோற்ற நாளில்

எல்லாம் சுவையிழந்து போகிறது

பாதி பழுத்த ஆப்பிள் போல

பாதி பழுத்த பொழுது

அரை குறையாய்

சாணை பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது

 

 

11) பூதம் மிரளும் பயந்த

 

ஒளியைத் தொலைத்த

கம்பத்தடியில் 

கிளறித் தேடும் நாய்

திடுக்கென ஒழுகும்

வெளிச்சத்தினால் அருள்கிறது

கிளறி

மீண்டும் கிளறி

மேலும் கிளறி

மூடுகிறது

இடைவிட்டு வழிந்த

ஒளியின் கண்ணுக்கு

அப்பகலில்

நாயும் காணோம்

இருளும் காணோம்

 

 

 

12 இருட்டு ஒரு கவலையற்ற பறவை

 

~

கடைந்தெடுத்த பொறியின்

விரல் தீண்ட

மூளும் நெருப்பு பெருகுமிரவில்

ஓடுடைக்கும் செம்போத்துக் குருவி

தடுமாறிக் கூட்டைக் கடக்கிறது

கூடுடையும் பிறிதொன்றில்

தலை நீட்டும் பகல்

வழி தப்பும் பறவைக்கு

மற்றுமோர் இரவை

அலகில் திணிக்கிறது.

 

~

மின்மினிகள் தொலையும் காட்டில்

பொறுதும் விளக்கு

இல்லாத வழிகளை காட்டித் தரும்

நினைவு தப்பி இரவுதோறும்

எங்கெல்லாமோ அலையும் பறவை

காடு பற்றிக் கொள்வதை

உச்சி மலையமர்ந்து காண்கிறது

 

~

கங்கு மணல் காட்டில்

அரக்கு மரம் பாரிப்பாய்

துருத்தி நிற்கிறது

ஓடிந்து விழும் சுள்ளிகளை

கூடாக்கும் கற்றாழைக் குருவி

சிதையும் கன்றினுடல் கிழித்து

நீர்ப்பை உடைக்கிறது

நனைந்த மணல் துளிர்க்கும்

கள்ளியின் மலர்களைக் காண

இருட்டு வரை கத்திருக்கும்

அச்சிறு பறவை

 

~

உப்பு தோய்ந்த அலகில்

கொத்தும் கெழுத்திகளை

பனைச் சிலாம்பிலுரசி

செதிலுரித்து

திறந்த அலகினுள்

திணிக்கிறது ஆக்காட்டி

இரவில் தொலையும் கடலின்

பரப்பை அளக்கும் அதற்கு

பெரும் வயிற்றுக் கடல்

கிண்ண நீராய் தழும்புகையில்

வாய் திறந்து அலையும் கடலுக்கு

உவர் மணலைத் தின்னக் கொடுக்கும்

கரை மரப்பழங்கள்

எப்போதும் தித்திப்புக் குறையாதவை

என்பதும் தெரியும்

No comments:

Post a Comment