திலக்கியா
அழுகை ஓலங்கள் என் உடலை சுற்றி
மொய்த்துக்கொண்டிருக்கிறது நிமிடத்திற்கு
ஒரு முறை பூமாலைகள் என் சடலத்தின் மீது போர்தப்படுகின்றன, தலைவிரி கோலத்துடன் என்
தாயின் கதறல்கள், துண்டின் துணையோடு தூணில் சாய்ந்துகொண்டிருக்கும் என் அப்பா இவை எதுவும்
என் இறப்பை மீட்டெடுக்க போவதில்லை. அவள் விழிகள் உயிரற்ற என் உடலை சந்திக்கும் தருணம் ஒன்று வாய்த்தால் இறந்த பின்பும் மீளுவேன்.
அவளின் வருகையை எதிர்பார்த்தபடி தெரு முனையில் அமைந்துள்ள கட்சிக்கொடி கம்பத்தின் படியில்
அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சூரியன் சாயும் நேரம் மனிதர்களும்
அவரவர் இருப்பிடத்தை தத்தம் அடைகிறார்கள். பள்ளி முடிந்து தனது பாட்டியின் விரலை
பிடித்துகொண்டு வீட்டிற்கு விரையும் அந்த மழலை, மொபெட்டில் தனது காதலியை
அமர்த்திக்கொண்டு உல்லாசமாய் வளம் வரும் அந்த இளைஞன். துப்பாக்கியை தோளில் சுமந்து
பராக் பார்த்து கொண்டே தன் மனைவியுடன் செல்லும் அந்த குறவன். என் வீட்டு வாசலின்
வழியே எனக்கு காட்சியளிக்கிறார்கள். நான் வேண்டுவது அவளின் முகம்... அவளை தவிர
வேறு யாரையும் சிந்திக்க மனது ஒப்பவில்லை. நடந்தே அவள் கிராமத்திற்கு சென்றால்
என்ன? இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி அந்த கிராமத்திற்கு
சென்று வந்த ஞாபகம் அத்தெருவின் வீடுகளும், சாணத்தின் வாசமும் இப்பொழுதும் கூட
நினைவலைகளில் தடம் பதித்துகொண்டிருக்கிறது. ப்ச்... நவீன உலகத்தில் மனிதர்களுக்கான
சிறகை மட்டும் ஏன் உருவாக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை... அப்பிடி ஒன்று அமைந்திருந்தால்
இந்நேரம் அவள் கோலமிட வாசலுக்கு வரும் முன்பே என் வருகையை பதிவுசெய்திருப்பேன்.
படிப்பிற்காக நகர வாழ்க்கைக்குள் படி எடுத்து
வைத்தாயிற்று புழங்கிக்கொண்டிருக்கும் இன்னல்களை மனதுக்குள்ளோ இல்லை உடலுக்குள்ளோ
பதுக்கிவைக்கவேண்டும். பிறரின் சிநேகம் கிடைத்திருந்தால் என்னை நானே பாதுகாத்துகொள்ளும்
தேவை இருந்திருக்காது. கல்லூரிக்கு
வந்து சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் கூட என் அருகில் அமர்வதற்கு
ஒருவரும் பிராயத்தனப்படவில்லை. ஜடை பின்னிய என் கேசமும், மை பூசிய என் சதையும் பிறரை
என் வசம் திருப்பாமல் இருந்திருக்கலாம். அவளை பார்க்கும் வரையில் அப்பிடி தான்
நிச்சயித்துக்கொண்டேன். இரண்டாம் பாடத்திற்கு மணி அடித்த பொழுது வகுப்பறைக்குள்
பிவேசித்தவளின் விழி தேடல் என் இருப்பை தேர்வு செய்தது. எந்த சலணுமுமின்றி என்
அருகில் வந்து அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து வெளிப்பட்ட வாசம் இயற்கையின்
நறுமணமா...? இல்லை தேகத்தின் மேல் அப்பியிருந்த செயற்கையின் நறுமணா...? என்று
எனக்கு தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.
அன்று கல்லூரிக்கு சென்ற முதல் நாள் அவள்
அருகில் தான் அமர்ந்தேன். ஏதோ ஒரு உந்துதல் அவள் அருகிலான இருப்பிடத்தை தேர்வு
செய்ய தூண்டியது. என்னை பார்த்தாளா என்று தெரியவில்லை நானாகவே அறிமுகம் செய்துகொண்டேன்.
“ஹாய்... ஐ யம் திலா..” மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருந்த கயிறு மட்டுமல்ல அவள்
தேகமும் கருப்பு தான். நெற்றியில் பதிந்திருந்த விபுதி அவள் கருமையை அலங்கரித்தது.
மௌனத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பற்கள் சிரிப்பின் வழியே தலைகாட்டியது.
அவள் அணிந்திருந்த கம்மிஸ் எத்தனை
விலையோ...! உடையின் சிகப்பும் அவள் மேனியின் சிகப்பும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது. அவள் அந்தஸ்த்தை ஒத்திய பெண்கள் கல்லூரியில் பலர் இருந்தும் கூட என்னிடம்
தான் அதிகமாக உரையாடிக்கொண்டிருந்தாள். என் பெயரை சொல்லி அறிமுகபடுத்திய
நாளிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் இலக்கியா... என்னும் நான் அவள் நாவிலிருந்து
உதிர்ந்துகொண்டே இருந்தேன். எங்கெங்கோ அழைத்து சென்றாள் என் கரம் அவள் பிடியில்
தான் அந்நகரத்தை வளம் வந்து கொண்டிருந்தது.
நகர வாழ்க்கை பழகியும் கூட இலக்கியாவின் வாழ்வு
தன் பெற்றோக்கு அனுப்பும் கடிதத்தில் தான் சுவாசித்துகொண்டிருந்தது. எப்பொழுதும்
கடிதம் கல்லூரியைபற்றி, நகரத்தைபற்றி குறிப்பாக என்னைபற்றி இலக்கியாவின்
எழுத்துக்கள் என்னை ஆராதிக்க தவறியதே இல்லை. ஒரு முறை அவள் ஹாஸ்டல் அறைக்கு செல்லும்
பொழுது அனுப்புவதற்கு தயாராக மேசையின் மேல் வைத்திருந்த கடிதத்தை படிக்க நேர்ந்தது
அதில் “திலா எனக்கு தெரியாமலே என்னை தத்தெடுத்துகொண்டாள் அப்பா... அவளை போல் இவ்வுலகில் சினேகிதி இருக்கபோவதில்லை, தயங்காமல் சொல்லுவேன்
நீங்கள் எனக்கு பெற்றோர்களாக கிடைத்ததைவிட திலா எனக்கு சினேகிதியாக கிடைத்தது தான்
என் வாழ்வில் நான் கொண்ட பெரும் பாக்கியம் கூடியவிரைவில் அவளை நம் கிராமத்திற்கு
அழைத்து வருகிறேன்” நீண்டுகொண்டே போனது என்னைபற்றிய புராணமும் இதிகாசமும். அவள்
எழுதத் தெரிந்தவள் எழுத்தின் வாயிலாக சொல்லிவிட்டாள் நான் எப்படி நிருபிப்பேன் அவள்
என்னுள் கலந்த குருதி என்று.
கல்லூரியில் எங்களுக்கு பெயரும்
வைத்தாயிற்று நாங்கள் ஜோடி புறாக்கலாம். நிதர்சனம் அதுவே... எங்களை போல் இல்லை என்று
பொறாமைபடும் மாணவிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சில பொழுது என்னை
மாற்றுவிக்கும் தூரிகையாக திலா செயல்பட தொடங்கினாள். அவளை போலவே ஒப்பனைகளை எனக்கும் தோற்றுவித்தாள், ஆங்கிலம்
பழக கற்றுக்கொடுத்தாள், துணிவோடு நகர மனிதர்களை எதிர்கொள்ளும் வீரியத்தை என்னுள்
விதைத்தவளும் அவளே. என்னை நானே இழக்க தொடங்கிய நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது.
மெல்ல... மெல்ல... திலாவின் ஆக்கிரமிப்புகள் பெருகிக்கொண்டே போனது.
இலக்கியாவுடன் சேர்ந்து நான்
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கானும் இடங்களில் எல்லாம் என் வீட்டு சுவற்றில்
பளிச்சிடும். கல்லூரி மட்டுமல்லாது வீட்டிலும் அவள் முகத்தை தேடியே என் மனம்
அலைந்துகொண்டிருந்தது. படிப்பு, லட்சியம், எதிர்காலம் எதைபற்றி சிந்தித்தாலும் இலக்கியாவின்றி
அது முழுமை பெறாது என்றே நம்பதொடங்கினேன். தனிமையில் அவளை
நினைத்து சிந்திக்கும் பொழுதுகளில் ரோமங்கள் தலை தூக்கி அதில் நீர் வழிவது போல் என்
தேகம் அவஸ்த்தைபட்டது. கோவிலுக்கு செல்ல அவளுக்கு பிடிக்கும் இமை மூடி
உதடுகள் துடிக்கும் முனகல்களை கூட ஒற்றை பார்வையில் அவ்வழகை ரசித்துகொண்டிருப்பேன்.
என்ன வேண்டிக்கொள்வாளோ… பல தடவை கேட்டிருக்கிறேன் “என் வேண்டுதல் கடவுளுக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு
நகர்ந்துவிடுவாள். என்னுடைய புலம்பல்கள் அந்த கடவுளுக்கு தெரிந்திருக்குமோ...
இல்லையோ...
என் புத்தக இடுக்குகளில் திலாவின்
புகைப்படங்கள் மூச்சின்றி உறங்கிக்கொண்டிருக்கும். திலா என்னுடன் இருக்கும்
நேரத்திற்க்காகவே கல்லூரி நாட்களை அதிகம் விரும்பினேன். அவளுக்கு கடற்கரை செல்ல
பிடிக்கும் தொலைவில் அமர்ந்து கொண்டே அவள் அலைகளுடன் ஓடி பிடித்து விளையாடும் அழகை
ரசித்துகொண்டிருப்பேன். எங்கள் இருவரின் பெயரையும் கடற்கரை மணலில் எழுதி எழுதி
அலைகளுக்கு பசியாற்றிகொண்டிருப்பாள். அழியும் என தெரிந்தும் அவளது விரல் கடல்
மணலோடு போராடிக்கொண்டிருக்கும். “அழிஞ்சிடுச்சிடி இலக்கியா” முகத்தை பாவமாக
வைத்துக்கொண்டு மீண்டும் எழுதுவாள் தள்ளிநின்று அதை அழகு பார்க்கும் முன் கடல் அலைகள்
முந்திக்கொள்ளும். அவளுடைய விரல் வலி தாங்காதே... திலாவை ஏமாற்றிக்கொண்டிருக்கும்
இந்த கடல் வற்றி போனால் என்ன...? மனதுக்குள் அலைகளையும் அவைகளை தூது அனுப்பும்
கடலையும் சபித்துக்கொண்டே இருப்பேன். சீற்றம் கொண்டு “அவைகளுடன் போராடாதே திலா..!
உன் விரல் பாவம்... காலத்திற்கும் அழியாத சுவடு என் மார்பில் பதிந்திருக்கிறதடி” என்
மார்பில் குத்திய அவள் பெயரை காட்டவேண்டும் என்று பல பொழுது தவித்திருக்கிறேன்.
திலா என்னும் பிம்பம் ஏன் இலக்கியாவாக உருபெற
கூடாது பல பொழுதுகள் திலா என்னை இம்சித்தாள். கண்ணாடியில் எனதுருவம் மறைந்து அவள்
உருவம் பிரதிபலிக்க தொடங்கியது. கல்லூரியில் மட்டுமல்லாது கனவிலும் என்னை
தொடர்ந்துகொண்டிருக்கிறாள். அவள் நினைவாகவே கருமையை அதிகம் உடுத்த ஆயுத்தமானேன்.
பொங்கல் பண்டிகை, திருவிழா, செமஸ்டர் விடுமுறை எல்லாமே இலக்கியாவின் கிராமத்தில்
தான். தலைவிரி கோலமாய் சுற்றிக்கொண்டிருந்த என்னை ஜடை பின்னலெடுத்து மல்லி வைத்து
அழகு பார்த்தாள், அவளை போலவே பாவாடை தாவணி கட்டுவித்தாள், நான்
கோலமிடும் வளைவுகளெல்லாம் அவள்
கரம் பிடித்தே, ஏன் சப்பணமிட்டு சாப்பிட கற்றுகொடுத்தவளும் அவள் தான்.
இப்பொழுதெல்லாம் திலா-இலக்கியா என்று எழுதியே அழகு பார்க்கிறேன். சில உணர்வுகள் என்
எதிரில் நின்று வினாவுகிறது இலக்கியா உன் தோழி மட்டும் தானா?
கல்லூரியின் வருகை பதிவேடு புத்தகத்தை
இருவருக்கும் தனித்தனியே புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இருவரின்
விடுமுறையும் வேறுபட வாய்ப்பில்லை. விடுமுறை எடுக்கும் திட்டம் இருந்தால் முன்னமே திட்டமிட்டுகொள்வது
எங்கள் இருவரின் வழக்கம். அன்று ஒரு நாள் கல்லூரி வாசலில் நீண்ட நேரம்
காத்திருந்தும் கூட திலாவின் வருகை தென்படவில்லை. உள்மனதிலும் கூட வியர்க்க
தொடங்கியது. கல்லூரியை விட்டு வெளியே வந்து டெலிபோன் பூத் வாயிலாக திலாவின் வீட்டை
அணுகிய பொழுது தான் அவள் வீட்டு வேலைக்காரியின் மூலமாக விசயம் கசிந்தது படியில்
இருந்து தவறி விழுந்த திலா கையை உடைத்துக்கொண்டாளாம். டாக்சி ஒன்றை பிடித்து மருத்துவமனையை
சேரும் வரையில் என் உயிர் நாடி இரயிலின் சக்கரங்களாக சுழல தொடங்கியது. ஓவென்று....
அழுகை குரல்கள் நான் அமர்ந்திருந்த கட்சிக்கொடி படியை நோக்கி வந்தது திரும்பி
பார்தேன்.. தென்ன ஓலையில் பின்னப்பட்ட பாடையில் என் உடலை கிடத்த என் பெற்றோர்களும்
உறவினர்களும் தாயராகிகொண்டிருந்தார்கள்... சீக்கிரம் வந்துவிடு திலா...
உள்ளே பிரவேசித்தவள் நான் சகஜ நிலையில்
அமர்ந்திருப்பதை பார்த்தும் கூட அழுதுகொண்டே இருந்தாள். “ஒன்னும்
இல்லடி லேசா தான் அடிபட்டிருக்கு நார்மலா தான் இருக்கேன்” அவளை
சமாதானம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அவள் கண்ணீரில் தான் நனைந்துகொண்டிருந்தன. திடிரென்று
கண்ணீரை துடைத்துவிட்டு என்னை கண்டபடி திட்ட தொடங்கினாள். அவளை பார்த்து
புண்முறுவல் செய்துகொண்டே அவள் திட்டுவதை ரசித்துக்கொண்டிருந்தேன். திட்டுவதிலும் சினத்திற்கு
பதிலாக கொஞ்சல்களே அதீதமாக கலந்திருக்கும் அவளது பேச்சில். இலக்கியாவின் பொய்மை கலந்த சினத்தை ரசிப்பதற்க்காக
வேண்டுமென்றே பலமுறை அவளை சீண்டியிருக்கிறேன். அன்றைய நாளிலிருந்து இலக்கியா
கணப்பொழுதும் என்னைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. என்னை கவனித்துகொள்வதற்காகவே
என் வீட்டின் அறையை என்னுடன் பகிர்ந்துகொண்டாள்.
திலா அப்பாவிற்கு என் சமையல் பிடிக்கும்
அவரிடமிருந்து பாராட்டுதலை பெறுவதற்காக அவ்வப்போது நான் திலாவின் வீட்டிற்க்கு
விரைவேன். என்னை ஓயாது சீண்டுவதில் தான் அவளின் பொழுதுபோக்கு
சமைத்துகொண்டிருக்கும் போது உப்பையோ காரத்தையோ கொட்டிவிட்டு ஓடிவிடுவாள். குழந்தை
பாவனையில் அவள் செய்யும் புன்முறுவல் கோடி அழகு. விசாலமான அவ்வீட்டில்
சிறுபிள்ளைகளாய் இருவரும் விளையாடிக்கொண்டிருப்போம். அவளால் நடக்க முடியாது என
தெரிந்தும் அவளின் சீண்டுதளுக்காக ஏங்கிக்கொண்டு சமயலறையில் இருந்து நிமிடத்திற்கு
ஒரு முறை எட்டி பார்த்துகொண்டிருப்பேன். பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கும் போது திலா
பயன்படுத்திய மேலாடை தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய வாசம் அதில் கலந்திருக்குமோ...! நுகர வேண்டும் போல் இருந்தது திலாவின் வாசம்
முழுவதும் அதில் வியாபித்திருந்தது. நாசியின் வழியே திலா என்னை ஊடுருவினாள்.
கேட்டு அணிந்தாலும் அவள் மறுப்பு ஏதும் சொல்லப்போவதில்லை ஆனாலும் மனது
சஞ்சலப்பட்டது. அவள் மேலாடையை அணிந்துகொண்டேன் திலா என்னை ஆரத்தழுவிக்கொண்டதாக ஒர்
உணர்வு கண்கள் மெல்ல செருகி புலம்பினேன். இப்படியே என்னை அணைத்துக்கொண்டிரு திலா...
உடல் தேறியபொழுதும் இலக்கியா என்னை குழந்தையாக
தான் பாவித்தாள். அவள் உதவியின்றி சாப்பிட முடியும் ஆனால் அவள் விரல் என் பற்களில்
உரசும் அந்த ஸ்பரிசம் வேண்டும். அவள் உதவியின்றி நடக்க முடியும் ஆனால் என் தோள்களை
அரவணைக்கும் அந்த பிடிப்பு வேண்டும். அவள் பிரித்துகொடுக்கையில் சாப்பிடும் மாத்திரைகள்
கூட தொண்டை குழியில் இனிப்பாய் தான் இறங்குகிறது. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு
என்னை நெருங்கிய பொழுது அவள் உடலில் இருந்து பரவும் அந்த வியர்வை வாசம்...
கழுத்திலும் நெற்றியிலும் இடையிலும் பிசுப்பிசுப்பை ஒப்பிய அந்த ஈரம் பூரித்த
சருமம் முழுவதும் எனக்கு வேண்டும்... என்னை நெருங்காதே இலக்கியா போதையூட்டும்
உந்தன் வாசம் ஏதோ செய்கிறதடி... அவள் மோவாயை பிடித்து என் பார்வையே நீயாக வேண்டும்
இலக்கியா என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. மதிய பொழுதில் இலக்கியா சோபாவின்
மேல் உறங்கிக்கொண்டிருந்தாள் சாளரத்தின் வழியே வந்த சூரிய கதிர் அவள்
மூக்குத்தியின் கற்கள் மீது மோதிக்கொண்டு மின்னியது. இந்த கருப்பு தேவதையை
அள்ளிக்கொண்டால் என்ன...? அவள் உதடுகளில் படர்ந்த காந்த விசை ஈர்ப்பு என் உதட்டோடு
அவள் உதட்டை நெருங்க செய்தது... இது என்ன மாதிரியான உணர்வு மூளைக்குள் இடித்த அலார
ஒலி சுதாகரித்துக்கொண்டு பாத்ரூமிற்கு விரைந்தேன். அழுதுகொண்டே இருந்தேன்
மனப்புழுக்கத்திலிருந்து விடுபட இனி நான் என்ன செய்ய வேண்டும்...
என்னை கடந்து என் உடல் மயானத்திற்கு
போய்கொண்டிருக்கிறது சங்கின் ஓசையும் சேமங்குல மணியும் என் இறப்பை
அறிவித்துகொண்டிருக்க சிதறிய பூக்கள் மீது பாதம் பதித்துக்கொண்டு கிராம மக்கள் என்
உடலை பின்தொடர்கிறார்கள். கடைசி நபராய் அவர்களை நான் பின்தொடர்கிறேன் இன்னும் ஏன்
திலா வரவில்லை...? என் சித்தப்பா மகன் ஊர் தலைவரின் வீட்லிருந்த டெலிபோன் வாயிலாக
என் இறப்பை திலா வீட்டிற்கு தெரிவித்ததை நான் பார்த்தேனே... வரும் வரையில் ஏதேனும்
பிரச்சனையா..? சீக்கிரம் வந்துவிடு திலா இன்னும் சிறிது நேரத்தில் என் உடல்
நெருப்பிற்கு காணிக்கையாக்கப்படும். கானும் முகங்களிளெல்லாம் உன் உருவத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை ஏமாற்றிவிடதே திலா
சீக்கிரம் வந்துவிடு.
தூரத்திலிருந்து வந்துகொண்டிருப்பது என்
அப்பாவின் கார் தான். நான் நின்றிருப்பதை கவனித்தாரா என்று தெரியவில்லை அதிவிரைவாக
வீட்டின் உள்ளே நுழைந்தது. சில பொழுதுகள் இலக்கியாவுடன் நெருங்கியும் தள்ளியும்
இருந்தேன். அவள் என் இலக்கியா என்று ஓயாது என் மனம் உரிமைகொண்டாடியது. யாருக்காக பிறந்தவள் அவள்...
அவளே சொன்னாளே நான் அவளை தத்தெடுத்துவிட்டேன் என்று நானும் உனக்காக பிறந்தவள் தான்
இலக்கியா... இதை எப்படி அவளுக்கு உணரச்செய்வேன். கல்லூரி முடியும் நேரமும்
நெருங்கியது. இந்த நான்கு வருடத்தில் தள்ளி வைத்தே பார்த்து பழக்கப்பட்ட பிரிவு
எங்கள் இருவரையும் தள்ளி வைக்க முந்திக்கொண்டு வந்தது. இலக்கியாவை இழக்க நான்
விரும்பவில்லை வாழ்க்கையின் தேடலுக்காக அல்லாமல் அவளை என்னுடன் தக்கவைத்து
கொள்வதற்காகவே மேற்படிப்பிற்க்கு டெல்லியில் உள்ள கல்லூரியில் இருவருக்கும்
சேர்த்து விண்ணப்பித்திருந்தேன். இலக்கியாவின் பெற்றோரை சமரசம் செய்து அவளை என்னுடன்
டெல்லிக்கு அழைத்து செல்வதே என் திட்டம். இல்லக்கியாவை கடத்தி செல்லும் மனநிலையில்
தான் என் மூளையும் இயங்கிக்கொண்டிருந்தது. இல்லகியா என்னுடன் இருந்தால் போதும்
அதற்கான வேளையிலும் ஆயுத்தமானேன். அவள் ஊருக்கு சென்ற ஓரிரு வாரங்களில் அவளிடம் வந்த
கடிதம் தான் நான் தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு முழுவதுமாக முழுக்கு போட்டது.
உள்ளே நுழைவதற்கு முன்பே இடுகாட்டின் வாசம்
வா... வா... வென்று வரவேற்றது. பேருந்தில் ஏறுவதற்கு முன் அவள் கொடுத்த
அரவணைப்பும், என் தோள்களில் படிந்த அவளது கண்ணீரும் ஊருக்கு வந்து சேர்ந்த
பொழுதும் கூட என்னை விட்டு விலகவில்லை. அவள்
கொடுத்த வாக்குறுதி இன்னும் இரண்டு வருடம் நீடிக்க செய்யும் என்னும் நம்பிக்கையில்
அவளுக்காக காத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஆள் அடையாளம் தெரியாத உறவுமுறை
திருமணம் என்னும் சுழிக்குள் என்னை மூழ்க வைக்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.
என் அனுமதியின்று எப்போதோ நிச்சயிக்கப்பட்ட விஷயமாம்... அவளுடன் இருந்த நாட்கள்
இனி வரப்போகும் நாட்களில் கிடைக்குமா...? என் வீட்டு அந்நியர்கள் என் வாழ்க்கை
வடிவத்தை வரைந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அவளுக்கு கடிதம் எழுதினேன்
நான் தற்கொலை செய்யவிருக்கும் விஷயத்தை தவிர...
அப்பாவின் காரை தொடர்ந்து சிறிது நேரத்தில்
போலீஸ் ஜீப்பும் அதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் முன்
வந்து நின்றது. வெள்ளை சீருடை அணிந்து ஆம்புலன்ஸிலிருந்து குதித்தவர்கள்
வீட்டினுள் பிரவேசித்து அவர்தம் வேளைகளில் ஈடுபட்டார்கள். வீட்டு வாசலில் சலசலப்புடன்
பரிட்சயமான அக்கம் பக்கத்து முகங்கள் தென்பட தொடங்கின. கை குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டு
மூக்கு கண்ணாடியை கையில் பிடித்தபடி தேம்பியவாறு வெளியே வந்துகொண்டிருந்தார் என்
அப்பா. தன் முந்தானையால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதுகொண்டே வெளிவந்தாள் வேலைக்காரி. உச்சுக்கொட்டிகொண்டு காற்றோடு
கலந்துவந்த புலம்பல்கள் வீட்டு வாசலில் முன் பரவியது. கருப்பு உடை அணிந்து
ஸ்ட்ரெக்சரில் தூக்கிசெல்லப்பட்ட ஓர் உடல் அருகில் சென்று பார்த்தேன் இமை மூடிய எனதுருவம் தெரிந்தது.
“பாக்குரவங்க... கடைசியா முகத்த
பாத்துக்கலாம்...” கையில் வரட்டியை வைத்துகொண்டு வெட்டியான் ஏலம்
விட்டுக்கொண்டிருந்தான். எவரிடமிருந்தும் மறுமொழி வராமல் இருக்கவே அந்த சொர
சொரப்பான வரட்டியை என் முகத்தில் போர்த்தி என் அப்பாவிடம் கொள்ளியை கொடுத்து அவரை
ஆழுதப்படுத்தினான். உடலோடு சேர்ந்து என் ஆசைகள் எரிந்துகொண்டிருந்தது தொலைவில் நின்றவாறே
நான் சாம்பலாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு வண்டியும் கண்ணில் இருந்து மறைய
தொடங்கின... வாசலில் நின்றுகொண்டிருந்த முகங்கள் அவரவர் வீட்டிற்கு சென்றன... நான்
இன்னமும் என் வீட்டு வாசலிலே நின்றுகொண்டிருக்கிறேன்.
திலா அவள் அம்மாவின் இறப்பைபற்றி பேசியிருக்கிறாள்,
இலக்கியா ஜாதி கலவரத்தில் அவன் அண்ணன் இறந்ததைபற்றி பேசியிருக்கிறாள், திலா தன்
பள்ளிபருவத்தைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தன் கிராமத்தைபற்றி
பேசியிருக்கிறாள், திலா தனக்கு பிடித்த நடிகரை பற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா
தனக்கு பிடித்த பாடலை பற்றி பேசியிருக்கிறாள். ஏதேதோ விஷயங்களை பேசியிருக்கிறோம்
ஆனால் காதலைபற்றி இதுநாள்வரையில் நாங்கள் பேசியதே இல்லை.
No comments:
Post a Comment