இங்குப்
பேனா
அந்த கடையை நெருங்கும் நேரம் மட்டும் படபடப்பும், அவசரமும் எப்படியோ
உடலுக்குள் ஒட்டிக்கொள்கிறது. அத்திசை மட்டும் வேண்டாம்... கிடைக்காத ஏதோ ஒன்றை
ரோட்டில் தேடிக்கொண்டு நடந்து போ.... இன்னும் கொஞ்ச தொலைவு நடந்தால் வீட்டிற்கு
திரும்பும் சந்து... அதுவரை நிமிராதே... இப்பொழுது மட்டுமல்ல பனிரெண்டு வருடங்களாக
மனதின் சொல்படி இணங்க மறுத்து காந்தலின் விசை ஈர்ப்பு போல் அந்த கடையின் பக்கம்
திரும்புவதில் தான் ஒரு லயிப்பு உண்டாகிறது.
எனக்கு தெரியும் நான் வரும் நேரங்களில் சட்டையின் கை மடிப்பை
உயர்த்திக்கொண்டும், எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட தலையை விறுவிறுப்பாக
அலங்கரித்துக்கொண்டும் கடையின் வாசலில் வந்து நிற்கும் ஐசக் இப்போது இல்லை என்று.
அன்னை மரியா சலூன் கடை கொஞ்ச வருடங்களாக காயத்ரி மளிகை கடையாக மாறிவிட்டிருந்தது. பல
பொழுது அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இருந்தும் கூட அந்த
கடைக்கு இதுவரை நான் சென்றதில்லை. நெற்றியை சொரிந்துகொண்டு நிற்கும் ஐசக்கின் முகத்தை
அந்த கடையில் ஏதோ ஒரு மூலையில் தேடவேண்டி இருக்குமோ என்னும் பயம்.
வீட்டிற்கு திரும்பும் தெருவை வந்தடைந்ததும் அருகில் உள்ள மெடிக்கல்
ஷாப்பில் என் மகளுக்காக ஹக்கீசும் எனக்காக நாப்கினும் வாங்கிக்கொண்டேன்
நாப்கினுக்கு மட்டும் ஸ்பெஷலாக செய்தி தாள்களை அணிவித்து கொடுத்தார்கள். பள்ளி
முடிந்து வீட்டிற்கு விரையும் மாணவர்களின் நடமாட்டம் அத்தெருவை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நானும் என் ஆசிரியர் பணியை முடித்து தான் வீட்டிற்கு
விரைந்துகொண்டிருக்கிறேன்.
ஐசக்கின் தங்கை எதிரில் வந்துகொண்டிருந்தாள் அவன் நிலை குறித்து
அவளிடம் விசாரிக்க நினைக்கும் நேரத்தில் பாலத்தீன் கவரில் ஊசலாடிக்கொண்டிருந்த
ஹக்கீஸ் கவரும், என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியும் எனக்கு நினைவூட்டியது நான்
தாயும், மனைவியும் ஆனவள். பாதங்களை முன்வைத்தும் மனதை பின்வைத்தும் நடந்து
சென்றேன். எதிரில் வந்தவளின் முகத்தை பார்க்காமல் மீண்டும் தரையில் ஏதோ ஒன்றை தேட
நேர்ந்தது.
வீட்டு வாசலை நெருங்கும் முன்பே குழந்தையின் விசும்பல். என் அம்மாவின்
இடுப்பில் இருந்து என் இடுப்பிற்கு தாவியவளின் கால்கள் பட்டாம்பூச்சி சிறகாய் அடித்துகொண்டது.
“அம்மா வந்துட்டேன்டா செல்லம் வீட்டுக்கு லேட்ஹா வரேன்னு கோவமா அம்மா மேல” தினசரி
நான் உபயோகிக்கும் சொற்கள் ஐஸ்வர்யா மெர்லினுக்கு மட்டும் எப்படி சிரிப்பை கொடுக்கின்றதோ...
புடவையில் இருந்து நைடிக்கு மாறியதும் ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு மாடிக்கு
சென்றேன். மாடியில்
நின்றுகொன்று ஐசக்கின் வீட்டை சுட்டிக்காட்டி அவளோடு உரையாடிகொண்டிருந்தேன்.
விடைத்தாள்களை திருத்த வேண்டிய வேலை அதிகம் இருந்தது மாணவர்களின்
தெளிவான கையெழுத்தின் உதவியோடு சில விடைத்தாள்களை வேகமாவும் பொறுமையாகவும்
திருத்திக்கொண்டிருந்தேன். திடிரென்று ஐஸ்வர்யா மெர்லின் சிணுங்கிக்கொண்டு அழ
ஆரம்பித்தாள் அவளை தட்டிகொடுத்துக்கொண்டே மடியில் வைத்து பாலூட்டினேன். நெஞ்சில்
இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது ஆனால் அவன் நினைவுகளின் பாரத்தை எப்படி
இறக்குவது...? அவன் நினைவுகளை சிதைக்க நினைக்கும் பல வருட போராட்டத்தில் அவனே தான்
கடைசியில் வெற்றி காண்கிறான். இப்பொழுதும் கூட மடியில் குழந்தையை வைத்துக்கொண்டும்
நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டும் தவித்துகொண்டிருக்கிறேன். அன்று ஐசக் சொல்லிய
வார்த்தை “அவ்ளோ சீக்கிரம் என்னைய மறந்துட முடியாது செலஸ்டினா” அந்த வார்த்தைகள் தான்
ஒவ்வொரு இரவும் அவன் காதலை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபமாக
சொல்லிவிட்டான்.
ஐஸ்வர்யா மெர்லின் இப்பொழுது தூங்கிவிட்டாள் அவளை மார்பின் மேல்
கிடத்திக்கொண்டு படுக்கையின் மீது மெல்ல சாய்ந்தேன். எப்பொழுதும் போல் அவளிடம் என்
கதையை சொல்லும் வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தேன். “ஐஸு இன்னைக்கு என்ன நாள்னு
தெரியுமா...? அந்த ஐசக் பய இந்த நாள்ல தான் அவனோட காதல என்கிட்ட சொன்னான்”
ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது சிறப்பு வகுப்பை
முடித்துக்கொண்டு நான் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தேன். எப்பொழுதும் போல்
சலூன் கடை வாசலிலே எனக்காக காத்திருக்கும் அவன் நான் வரும் நேரங்களில் மட்டும் கடைக்கு
எந்த ஒரு கஸ்டமரும் வந்துவிட கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்துகொண்டிருப்பான்.. தன்
காதலை சொல்ல நினைத்து தவறவிட்டு போன நாட்கள் எத்தனை என்பது அவன் ஒருவனுக்கே
தெரியும். அன்று அவனுடைய நாளாக அமைந்துவிட்டது. ஐசக் என்னை பின்தொடரும் நேரங்களில்
சிறு நடுக்கங்கள் ஏற்பட்டாலும் உதட்டிலிருந்து வெட்கச்சிரிப்பு எப்படியோ
முளைத்துவிடுகிறது.
“செலஸ்டினா நில்லு” பலபொழுது என் பின்னே தொடர்ந்துகொண்டிருப்பானே ஒழிய
என் பெயரை சொல்லி இதுவரை உறக்க கூப்பிட்டது கிடையாது. மெதுவாக திரும்பினேன் ரிப்பன்
கட்டிய சிறிய பெட்டியை பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து எடுத்து என்னிடம்
நீட்டினான். “என் தங்கச்சியும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டா ஆனா நீ தான் இன்னும்
எதுவுமே சொல்ல மாட்டேங்குற” அதை வாங்க மறுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சரி இத புடி செலஸ்டினா” “எதுக்கு ஐசக்” அவன் கை விரல்கள் அவன் சிகையையே கோதிக்கொண்டிருந்தது.
தரையை பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ
முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய
பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே... எனக்கு உன்ன புடிச்சு
இருக்கு செலஸ்டினா” ஒரு ஆணின் தயக்கத்தையும், வெட்கத்தையும் ஐசக்கின் உடல்
நெளிவுகளில் முதல் தடவையாக ரசிக்க நேர்ந்தது. அப்பொழுது ஐசக் அழகாக இருந்தான்.
தாடியை சொறிந்துகொண்டு என் பதிலுக்காக காத்திருந்தான். அவன் கொடுத்த பரிசை
வாங்கிக்கொண்டு லேசாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
சீருடையை கூட கழற்றாமல் ஐசக் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தேன். சிவப்பு
நிறத்திலான பேப்பரில் சுற்றப்பட்டு இருந்த சிறிய பெட்டியில் கருப்பு நிற இங்குப்
பேனா ஒன்றை வைத்திருந்தான். உடனே எழுதி பார்க்க வேண்டும்போல் தோன்றியது எனது
குறிப்பேட்டின் கடைசி பக்கத்தில் எழுதுவதற்கு தயாராய் அப்பேனா என் விரல்களின் பிடியில்
நின்றுகொண்டிருந்தது. என்ன எழுதுவது...? ஐசக்கின் பெயரை எழுதி பார்க்கவே
எத்தனித்தேன் ஐசக்... உடலின் ரோமங்களின் மேல் ஊர்ந்து செல்கிறானோ…
ஒவ்வொன்றும் தலை தூக்கியது. அவன் பெயருக்கு கீழ் என்னுடைய பெயரையும் எழுதினேன்
செலஸ்டினா... இருவரின் பெயரையும் ஒரு ஆர்ட்டின் வடிவத்திற்குள் அடைத்தேன்.
காலையில் வேலைக்கு கிளம்ப இருக்கையில் ஐசுவின் அப்பாவிடம் இருந்து
போன் வந்தது. அடுத்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று கிளம்பி வர இருப்பதாக சொன்னார். ஐஸ்வர்யா
மெர்லின் பிறந்தபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து அன்றிரவே வெளிநாட்டிற்கு
விமானம் ஏறியவர் அவளின் முதல் பிறந்தநாள் அன்று கூட வீடு திரும்பவில்லை. தோன்றும்
நேரங்களில் தொடு திரையில் ஐஸ்வர்யா மெர்லின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலும்
இருவருக்கான ஸ்பரிசம் பல மைல்களுக்கு இடையில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தது.
வங்கிக்கு கட்டவேண்டிய வீட்டு கடன் பணத்தை என் கணக்கிற்கு பரிமாற்றம்
செய்திருப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.
வாழையடி வாழையாக கடன் சுமையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது.
ஐசக்கின் அம்மாவை விட்டால் கடன் வாங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் வேறு ஆட்களும்
இல்லை. அன்றிரவு ஐசக் என் வீட்டிற்கு வந்திருந்தான். எப்பொழுதும் வட்டி பணத்தை வசூலிக்க
அவன் வருவது தான் வாடிக்கை. அவன் அம்மாவின் வசை சொற்கள் எங்கள் வீட்டு வீதியில்
தாண்டவமாடுவதை அவன் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் வேண்டுவதும் கூட அது தான்.
அவன் ஒருவனே என் குடும்பத்தின் நிலை அறிந்தவன். எப்போதும்
போல் அப்பா வாஞ்சையாகவே அவனிடம் “ரெண்டு வாரமா வேல இல்லாம வீட்ல தான் இருக்கேன்
தம்பி இன்னும் எந்த ஒரு காண்டிராக்டும் வரல அடுத்த வாரம் கொடுத்திடுறேனு அம்மா
கிட்ட சொல்லிடுறியா...?” அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்க என் அப்பா எப்போதும்
தவறியது இல்லை. “சரிங்கனா பொறுமையாவே கொடுங்க நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்”
சிரித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டே
வேலைக்கு சென்றேன்.
பள்ளியில் சந்திப்பதற்கு முன்பே தெருவில் பார்க்கும் மாணவர்கள்
“குட்மார்னிங் மிஸ்” என்று என் மீதான மதிப்பை வெளிபடுத்தினார்கள். அன்னை மரியாள்
தேவாலயத்து ஊழியர்கள் சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறில் வைத்து வழிபட்ட ஓலையை சாம்பல்
புதன் தினத்தில் வைத்து எரிப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்துக்கொண்டிருந்தனர்.
அதில் நன்கு பரிட்சயமான ஒரு ஊழியர் என்னை பார்த்ததும் நெருங்கினார்.
“செலஸ்டினா டீச்சர் உங்க வீட்லியும் போன வருஷம் குருத்தோலை இருக்குல”
“இல்லீங்க பிரதர் நான் கொஞ்ச வருஷமா எதிலும் கலந்துகுறது இல்ல”
“ஓ.. சரி ஈஸ்டர் அப்போவாவது சர்ச்சுக்கு வந்துட்டு போங்க...”
பள்ளியை நோக்கி விரைய துடங்குகையில் மீண்டும் ஐசக் மனதிற்குள் தடம்
பதித்து உலாவினான். சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், சிலுவை பாதை என்று
பாதரிகளின் கட்டளைப்படி அனைத்து வேலைகளையும் முன்னமே செய்துமுடிப்பான். அன்றைய
குருத்தோலை ஞாயிறிலும் கூட அதற்கான வேளையில் இயங்கிக்கொண்டிருந்தான் ஐசக்.
ஓலையில் சிலுவையை வடிமைத்து கொடுப்பதில் ஐசக் கைதேர்ந்தவன் அவனை
சுற்றி சிறுசுகள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு “எனக்கு அண்ணா.. எனக்கு அண்ணா...”
என்று அவனிடம் மன்றாடிகொண்டிருந்தார்கள். சிலுவையை வடிவமைக்க தெரியாமல் வெற்று ஓலையை
வைத்துக்கொண்டு நான் அதனுடன் போராடிகொண்டிருந்ததை ஐசக் கவனித்தும்விட்டான். ஐசக்கின்
மனம் என் கையில் இருக்கும் ஓலை அவன் கரங்களில் தஞ்சம் அடையவே காத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று ஐசக்கின் தங்கை என்னிடம் இருந்த ஓலையை பிடுங்கிக்கொண்டு அவனிடம்
விரைந்தாள் “இந்தானா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு”
அவனிடம் கொடுத்துவிட்டு வரிசையில் நிற்க சென்றுவிட்டாள். உதடுகள் விரிய ஐசக் அந்த
ஓலையை சிலுவையின் வடிவில் அவன் இதயத்தை உருமாற்றிகொண்டிருந்தான்.
ஓசான்னா பாடல் ஒலிக்க மரியாள் தேவாலயத்தை நோக்கி பாதிரிகள் எங்களை
வழிநடத்தி சென்றார்கள். என் பின்னே ஐசக்கும் அவனது நண்பர்களும் சலசலத்தபடி
இருந்தனர். நீண்ட நேரமாக மெல்லிய குரலில் ஐசக் என்னை அழைத்துகொண்டிருந்தான் என்னவென்று
திரும்பி பார்க்கவோ, அவனுக்கு மருமொழியவோ அப்போதைய சூழலில் என் மனம் தைரியம்
கொள்ளவில்லை. தேவாலயத்தை நெருங்கும் வரையிலும் அவனது முயற்சிகள்
தோற்றுக்கொண்டிருந்தது. குருத்தோலை பவனி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் தேவயாலத்தின்
பின்புறம் அமைந்த சூசையப்பர் சிலை அருகே ஐசக் எனக்காக காத்திருப்பதை அவன் தங்கை என்னிடம்
வந்து சொல்லிவிட்டு சென்றாள். அவன் மீதான கோபமே என்னை அவனிடம் கொண்டு சேர்த்தது.
“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற... என்ன அவசரம்
உனக்கு...?”
தன் சிகையை கோதிக்கொண்டே “ஸாரி செலஸ்டினா... இன்னைக்கு நான் தான்
வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் புடிக்குது இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன்.
அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்டேன்”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அரசியல்
உருவங்களை சுவற்றில் வரைந்து காட்சியளிக்க அப்பா ஊரெங்கும்
சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கும் பணத்தில் அவரின் குடிக்கு போக துளியாய்
விழும் சில்லறைகளில் தான் எனக்கும் அம்மாவுக்குமான வாழ்கை நகர்ந்துகொண்டிருந்தது.
சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அப்பா கொடுக்க வேண்டிய வட்டி
பணத்தை ஐசக் என் கையில் திணித்தான். “அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு
செலஸ்டினா” நான்
வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவன் விடுவதாக இல்லை இம்முறை மட்டும்
வாங்கிகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அதற்க்கு பிறகான வட்டி பணம் முழுவதும் அவன்
மூலமாக தான் கட்ட நேர்ந்தது. கடைசியாக நான் ஊர்வலத்தில் வைத்து வழிபட்ட குருத்தோலையை
என் ஞாபகமாக வைத்து கொள்வதாக சொல்லி என்னிடம் இருந்து வாங்கி சென்றான். நிச்சயம்
அந்த குருத்தோலை உயிர்ப்புடன் இப்பொழுதும் அவனிடம் இருக்கும்.
மதியஉணவு இடைவேளையின் போது என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர் பிறந்தநாள்
என்று அனைவருக்கும் இனிப்பை பகிர்ந்துகொண்டிருந்தார். கலகலப்பான பேச்சுகளோடும்
சிரிப்புகளோடும் ஆசிரியர்கள் அவரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். என் ஒருத்தியால்
மட்டும் ஆர்வமின்றி அதிலிருந்து விலகி செல்ல மனது முனைந்தது. வெளியே வந்து பால்கனி
வழியாக செம்மண் போர்த்திய மைதானத்தை வெறித்து பார்த்தேன். இதே மைதானத்தில், இதே
பள்ளியில் என் பிறந்தநாளையும், நான் தேர்ச்சி பெற்றதையும் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து ஐசக் என்னை கொண்டாடி இருக்கிறான். வேலைக்காக எக்ஸ்போர்ட்
கம்பெனி வாசலை மிதிக்க இருந்த என்னை படிப்பிற்காக கல்லூரி வாசலை மிதிக்க வைத்தான்.
என் பெயருக்கு பின்னால் இருக்கும் B.A.
B.Ed., என்னும் பட்டம் அவன் உழைப்பினால் ஆனது, கை
நீட்டி வாங்கும் சம்பளங்களில் கூட அவனது முகம் தான் பிரதிபலிக்கிறது. எத்தனையோ
முறை என் கைசெலவிற்க்கும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுத்து உதவி இருக்கிறான் என்
சம்பள பணத்தை அவனது சட்டை பாக்கெட்டில் திணித்து உரிமை கொண்டாட நினைத்த
சந்தர்ப்பம் இதுவரை நிறைவேறாமலே போய்விட்டது.
ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐஸ்வர்யா
அப்பாவும் இன்று இரவு வந்துவிடுவதாக செய்தி அனுப்பினார் முதல் வருட பிறந்தநாளை விட
இந்த வருட பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஐஸ்வர்யாவின் அப்பா எண்ணி இருக்கிறார்.
வேலைகள் பல வரிசையில் காத்துக்கொண்டிருந்தது தலைமை ஆசிரியரிடம் இரண்டு நாட்களுக்கு
விடுமுறை சொல்லிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.
ரோட்டோரத்தில் அமைந்த ஒயின் ஷாப்பிற்குள் இருந்து ஒரு சிலரை மிரட்டல்
தொனியுடன் போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒயின் ஷாப்பிற்கு வருகை
தந்தவர்கள் போலிஸ் வண்டியை சுற்றி சலசலத்தபடி குழுமி இருந்தார்கள். நிச்சயம்
ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் சைரின் சத்தத்தை கிளம்பிக்கொண்டு போலிஸ் ஜீப்பிற்கு
முன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அதை தான் உணர்த்தியது.
அங்கே நின்றிருக்க பிடிக்காமல் நடையில் வேகத்தை கூட்டினேன். ஐசக்கை
முதுகில் அடித்து தரதரவென ஜீப்பில் ஏற்றிய சம்பவம் மீண்டும் மனத்திரையில் ஓடத்
துடங்கியது. அப்போது நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்த சமயம். எங்கள்
காதல் விவகாரம் வீட்டிற்க்கு மட்டுமல்ல எங்கள் குடியிருப்பு பகுதியிலும் கூட அனைவருக்கும்
தெரிந்திருந்தது. பெரிதாக எந்த ஒரு தடையும் இல்லை ஐசக் தனக்கு மருமகனாக அமைய நேர்ந்தால் தோன்றும் நேரங்களில்
பணம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அப்பாவின் எண்ணம். ஐசக்கின் வீட்டிற்கு நான்
மருமகளாக செல்ல நேர்ந்தால் தன் மகன் படித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறான்
என்று கௌரவமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்பது ஐசக் அம்மாவின் எண்ணம். இதில்
என் அம்மா மட்டும் தான் எந்த ஒரு முக சாயலையும் வெளிபடுத்தாமல்
முழித்துக்கொண்டிருந்தாள்.
நான் கல்லூரி முடித்து தினமும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தில் என்னை
காதலிப்பதாக சொல்லி ஓயாது நச்சரித்து பின்தொடர்ந்துகொண்டிருந்தவனை பற்றி ஐசக்கிடம்
நான் பேசியதே இல்லை. ஆனாலும் அந்த விஷயம் ஐசக்கின் நண்பர்கள் மூலம் எப்படியோ அவன்
காதிற்கு எட்டி விட்டது. அன்றிரவே ஐசக் எங்கெங்கோ அலைந்து அவனை பற்றி விசாரித்து
நேரில் சென்று அவனை எச்சரித்திருக்கிறான். பேச்சுவார்த்தையில் துடங்கிய சம்பவம் கடைசியில்
அடிதடியில் போய் முடிந்திருக்கிறது. ஐசக் அவசரத்தில் கையில் கிடைத்த கம்பியை
கொண்டு வெறியோடு அவனை அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். மறுநாள்
காலையில் ஐசக்கை போலிஸ்காரகள் கைது செய்யும் பொழுது தான் தெரிந்தது அவன் இறந்துபோன
விஷயம். மாரில் அடித்துக்கொண்டு ஐசக்கின் அம்மா ஜீப்பின் பின்னால் ஓடியதும்,
கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கண்டடைந்து கண்களாலே ஐசக் எனக்கு சமாதானம்
சொல்லியதும் இப்பொழுதும் நெஞ்சில் நீங்கா தழும்புகளாய் பதிந்திருக்கிறது.
அதற்கு பிறகான நாட்களில் விசாரணைக்காக நீதி மன்றத்திற்கும் காவல்
நிலையத்திற்கும் அலைந்துகொண்டிருந்தேன். தான் கைது செய்யப்பட்டதை விட தன் காதலி அடிக்கடி
வீட்டிற்க்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்துகொண்டிருந்தது தான் ஐசக்கிற்கு
வருத்தத்தை கொடுத்தது. எவ்வளவு பணம் செலவழித்தும் ஐசக்கிற்கு சாதகமாக எதுவும்
அமையவில்லை என்னை சந்திப்பதையும் ஐசக் தவிர்த்து வந்தான். கடைசி சந்திப்பில் தான்
ஐசக் முதல் முறையாக அழுததை என்னால் பார்க்க நேர்ந்தது. அழுதுகொண்டே என்னிடம் அவன்
கேட்டுக்கொண்ட விஷயம் “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா
பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வரதா” என் பதிலுக்காக
காத்திருக்காமல் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றான். வருடங்கள் ஓடி விட்டது
அவனுடன் கழித்த நாட்களின் ஏதோ ஒரு நினைவில் தினமும் என்னை சந்தித்து கொண்டு தான்
இருக்கிறான் சிரித்துக்கொண்டும்... அழுதுகொண்டும்...
ஆயிரம் புன்னகை உதட்டில் தவழ ஐஸ்வர்யாவின் அப்பா இரவு வீட்டிற்குள்
நுழைந்தார். முத்தங்களாலே ஐசுவின் உறக்கத்தை கலைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகான
அரவணைப்புகளும் தழுவல்களும் அவ்விரவு நீண்டுக்கொண்டே இருந்தது. பல வடிவங்களில்
பரிசு பொருட்களும் துணிமணிகளும் என்னையும் ஐசுவையும் சூழ்ந்துகொண்டிருந்தது. ஐசுவின்
அப்பா எனக்கென்று பிரத்தியேகமா வாங்கி வந்திருந்த பரிசை என்னிடம் கொடுத்தார்
வெளிநாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று இருந்தது மீண்டும் பழைய காதலனின்
நினைவுகளை என் கணவன் வாங்கிக்கொடுத்த பேனாவே தோண்டிக்கொண்டிருந்தது. எழுதி பார்க்க
மனமின்றி அப்பேனாவை பீரோவில் வைத்து பூட்டினேன்.
மறுநாள் ஐஸ்வர்யாவின் அப்பா ஐசுவின் பிறந்தநாள் ஒட்டியும் ஈஸ்டர்
தினத்தை ஒட்டியும் துணிமணிகள் வாங்க எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார்.
ஐஸ்வர்யாவிற்கு துணியை எடுத்தபின் எனக்கு புடவை எடுத்து கொடுக்க இரண்டாம் மாடிற்கு
அழைத்து சென்றார். ஈஸ்ட்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டம் அலைமோதியது
எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கடைசியாக ஒருவரை அணுகினோம்.
வார்த்தைகளின்றி கேட்க்கும் நிறங்களில் புடவைகளை சரசரவென விரித்துக்கொண்டிருந்தான் அவன். பார்த்த
மாத்திரத்தில் அவனால் என்னை அடையாளம்கொள்ள முடிந்தது என்னால் தான் சட்டென்று
அடையாளம்கொள்ள முடியவில்லை மொட்டை அடித்து பாதி முளைத்திருந்த மயிர், உடல்
மெலிந்து கூனி குறுகி நேருக்கு நேர் சந்திக்க வலுவற்று கீழே குனிந்தபடி சுழன்று
கொண்டிருந்தது அவன் பார்வை. அவனே தான் ஐசக்...! வெளிவர துடித்துக்கொண்டிருந்த
கண்ணீரை மனதின் பலம் கொண்டு முடிந்தவரை தடுத்தேன். ஐஸ்வர்யாவின் அப்பா
சுட்டிகாட்டிக்கொண்டிருந்த புடவைகளை சலிப்பின்றி கான்பித்துக்கொண்டிருந்தான்.
அவனது கண்கள் சிவந்துகொண்டிருந்தது அவனும் கண்ணீரோடு போராடுகிறான். எங்கள்
இருவருக்குமான சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..? செலஸ்டினா... செலஸ்டினா...
என்று தன் வாழ்நாளை கொண்டாடிகொண்டிருந்தவன் அதே செஸ்டினாவை பார்க்க
விருப்பமில்லாமல் நாதியற்று நிற்கும் நிலைமை. என் மீதும், ஐஸ்வர்யா மீதும்,
ஐஸ்வர்யாவின் அப்பா மீதும் அவனது பார்வை வீசிக்கொண்டே இருந்தது. அவன் படும்
அவஸ்த்தையை என்னால் பார்த்துகொண்டிருக்கமுடியவில்லை. உடல் எரிந்து
சாம்பலாகிகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது
கையில் சிக்கிய ஏதோ ஒரு புடவையை எடுத்துக்கொண்டு காரணங்கள் தேடி சமரசம் செய்து
ஐஸ்வர்யாவையும், ஐஸ்வர்யா அப்பாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். படி
இறங்கும் நேரத்தில் திரும்பி பார்க்கும் பொழுது இதழ்கள் விரிய ஐசக் லேசாக சிரித்துக்கொண்டிருந்தான்.
அனைத்தையும் இழந்து வெறுமையின் அரவணைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்தியது
அந்த சிரிப்பு.
மேற்கொண்டு வேறு எந்த கடைக்கும் செல்லாமல் அர்த்தமற்ற காரணங்களை
சொல்லி விடாப்படியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். சுதந்திரமாக கத்தி அழுவதற்கு
ஒரு சுவர் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வீட்டிற்கும் வந்ததும் தாழ்பாளின்
துணைகொண்டு கதவை அடைத்தேன். தரையில் சரிந்து கால்களை மடக்கி கழுத்தை தொங்கவைத்து
அழுது தீர்த்தேன்.. ஒரு புறம் ஐசக்கின் குரல் என்னை சமாதானப்படுத்த முயற்சி
செய்துகொண்டிருந்தது...
பீரோவின் மேல் இருந்த பெட்டியை கீழே இறக்கினேன் ஐசக் கொடுத்த இங்குப்
பேனா பொலிவிழந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆசையா... தோல்வியா... ஏமாற்றமா...
எதுவென்று தெரியவில்லை ஐசக்கின் பெயரை எழுதி பார்க்க முனைந்தது. கட்டில் மேல்
இருந்த என் டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் ஐசக்கின் பெயரை எழுதினேன்.. காற்றில்
வரைய முயற்சிக்கும் எழுத்தக்களை போல் உருபெறாமலே இருந்தது ஐசக்கின் பெயர்... அந்த
இங்குப் பேனா எழுதவில்லை. பேனாவை தரையில் உதறினேன் அந்த மை திட்டு திட்டுகளாக
ஐசக்கின் ரத்தத் துளிகளை போல் காட்சியளிதுக்கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சித்தும்
அந்த இங்குப் பேனா எழுதவில்லை... இனி எழுதப்போவதும் இல்லை. இந்நேரம் ஐசக் நான்
கொடுத்த குருத்தோலையை வைத்து அழுதுகொண்டிருப்பான் என்று மட்டும் தோன்றியது.
No comments:
Post a Comment