உள்ளுறையும் வன்முறை
அனைத்துவிதமான பயிற்சிகளையும்
அளித்திருந்தார்கள்
அனைத்திலும் தேறிவிட்டதான நினைப்பு
உள்ளூர குருகுருப்பு
அதன் விளைவான தோரணை
அந்த சர்வாதிகாரியை முடித்தாகுமாறு
ஆணை
இயல்பாக கலந்தேன் அவனிடத்தில்
சமயமும் வாய்த்தது
உகக்கா நிர்வாணத்தை அணிந்த
ஒரு பெண் துணையுடன் அங்கிருந்தான்
தளர்ந்த உடல்
சிறுநீர் பையை ஏந்தியபடி
அவளை அடிப்பதை ரசித்துச் செய்தான்
எதற்கும் அவளிடம் உணர்வே எழவில்லை
அவளைப் பற்றியபடி கழிவறையில் நுழைந்தான்
அவள் உடலும் அவன் கைகளும் மட்டுமே
பேசும் ஒலிகள்
மின்னலாக அவன் முன் எழுந்தேன்
தாக்கினேன்
நழுவி வெளியே வந்துவிட்டான்
கையில் கிடைத்த கிண்ணத்தால் அடித்தேன்
சில அடிகள் சில இடங்களில் சிவந்தன
அவன்மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும்
என்னைவிடுத்து அவளை அடிக்கிறான்
வெளித் தெரியாத
என் சலனத்தைக் கண்டுகொண்ட
அவனோ சிரிக்கிறான்
அவளோ சிலையாகவே இருக்கிறாள்
அவள் பெற்ற அடிகளில்
எனது கைகள் நீரில்
தவறி விழுந்தவனைப் போல
துவள்கின்றன இலக்கடையாது
சிவந்த அவளது உடலை
அவன் மேலும் சிவக்க வைக்கிறான்
என்னுள்ளுறைந்த தோரணை
வெக்கங்கெட்டு மண்டியிட்டிருந்தது
இறுதியாக எனது அத்தனையையும்
சேர்த்துத் திரட்டிக்கொண்டு
ஒரு அடியை அவனுக்குக் கொடுத்தேன்
கூசச் செய்த சிரிப்போடு
அப்படியே அவளுக்கதைக் கடத்தினான்
ஒரு கணத்தில் எனதுடல்
இறுகி வியர்த்துச் சூடேறி
நெளிந்தது
இதற்குமேல் அச்செயலை என்னால்
தாங்க இயலாத சங்கடத்துடன்
விழித்துக்கொண்டேன்
உள்ளுறையும் வன்முறை ஒலிக்கிறது
புவியிடை மனிதர்கொள் பொருள்
புடவியில் கொள்ளும் பொருளென்ன
உறுபசி அறுத்தல்
கைகள் பெறுவது இயற்கை
கைகள் கனிவது ஊழ்
அக்கனிவு
நம்மிடமும் கசியப்பெற்றால்
நாம் பெறுவது வரம்
அந்த அன்னை யாராயினும்
அன்னையரைப் போல
கைகள் கனிந்தவர்
வேரெவர்
எங்கோ ஒலிக்கிறது
மெல்ல மெல்ல
தனது கணக்கிடவியலா கால்களின்
அடி வைப்புகளில்
நகர்ந்து வந்து தாண்டிச் செல்கிறது
கதிர்க்கூட்டம்
தளர்ந்த
இறுதி நடை வைப்புகள்
மறையும் தருணம்
கூதலில் ஆழ
எங்கோ ஒலிக்கிறது அகவல்
செல்திசை நோக்கி
அனல் கொண்டு
மீண்டு வரும்படி
என்ன வேடிக்கை
நலமா.....
மனைவி மக்கள்.....
மகிழ்ச்சி
அதொன்றுமில்லை
அந்த முக்கு வேம்படியிலே
குட்டி வினாயகன் கோயில்
யாரோ எவரோ
செருப்பு மாலை போட்டுவிட்டார்களாம்
போட்டவர்
அவராகத்தான் இருக்கும்
இல்லை இல்லை
இவராகத்தான் இருக்கும்
என்று
அவரவர் பேசிக்கொள்கிறார்கள்
யார்தான் செய்தது
என்று
முறைத்தாலும் குழைந்தாலும்
குட்டி வினாயகன்
மூச்சடக்கி இருக்கிறானாம்
என்னதான் செய்ய
என்று கூடிப் பேசியதில்
இரும்புக் கதவு போட்டுவிடலாம்
வீட்டுக்கு நூறு வரி
என்பது ஏகமான முடிவு
நான் இரகசியமாக
கேட்டுப் பார்த்தேன்
அவன்
ஏதோ விளையாட்டாகச் செய்துவிட்டான்
என்று சிரிக்கிறான்
அவர்கள் குடும்பப் பண்பு போல
பேராது நிற்கும் பெருங்கருணை
ஓர் உயிர்
உடலென்னவோ சிறியதுதான்
அதில் விரிந்த வண்ணங்கள்
விசிறி விசிறி
விரித்து காட்டுகின்றன
விரிந்த புடவியழகின்
அருந்துளியை
சுவைகளால் நிறைந்த உலகில்
இனிமையை மட்டுமே
தொட்டெடுக்க படைக்கப்பட்ட
ஓர் உயிர்
கனி
மரத்தின் கரு
விதை
எனில்
கருக்குடம் கனி
அன்னையர்
இனிப்புகளை மட்டுமே
அறிந்தவர்களா
அல்லது
தன் வழியில்
உயிர்த்து வரும்
ஆயிரம் ஆயிரம்
குழந்தைகளும்
இனிமையில் மட்டுமே
திளைப்பவை
என்று அறிந்தவளா
அந்த மூதன்னை
கூதல்
தொட்டெழுப்பி
அணைத்துக்கொண்டது
அந்த அன்பை மறுத்து
கண்ணுறக்கம் கொள்ளும்
கொடிமனம் எனக்கில்லை
இருந்தும்
அணைப்பில்
இவ்வளவு இறுக்கம்
வேண்டாமே என்று கூறி
போர்வையையும் தலைக்கட்டையும்
கொடுத்தேன்
விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டது
காலை நடைக்கும்
அழைத்தது
தழுவலில் விலகலின்றி
புறங்கைக்கட்டோடு போனோம்
வெளியையும்
மறுகணமில்லாதபடிக்கு
அணைத்திருந்தது
இவ்வணைப்புக்கு
அப்பால்
வேலிகளை இணைத்திருந்தது
அணைப்புக்கு ஏங்கி விழுந்த
சிறுவான் துண்டு
சித்திரக்காரர்
மேலேறி அமர்ந்துகொண்டார்
என்றுதான் நினைத்தேன்
கவனிப்பாரா என்று தெரியவில்லை
நாங்கள் மட்டுமல்ல
சுற்றியிருந்த அனைவருமே
அவரவருக்கான
வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்
ஓரத்துக் குழாயில்
பால்க்கேனை கழுவவந்த பால்காரரிடம்
நீரடித்த பெண்களின் சலசலப்பு
சைக்கிளில் கரும்புக்கட்டோடு சென்றவர்
கோந்தாளையை தவரவிட
இவ்வீட்டுக்காரர் அவ்வீடொட்டித் தள்ளியதில்
அங்கே நான்கு புருவங்கள் இடித்துக்கொண்டன
இருவர் சேர்ந்து
மணிநேர லயிப்பில் உருவாக்கிய
கோலத்தில் விழுந்த பொடுசுக்கு
‘பொச்சடங்காதா’
என்று பொரிந்த தாய்
கட்டிட வேலை முடித்து
கைகால் கழுவையில்
நீரடித்துக் கூச்சலிட்ட இளசுகள்
நகராட்சி குப்பைத்தொட்டியில்
அகழ்ந்த சேலையை
அவரது தேவைக்குக் கிழித்துக்கொண்டிருந்தார்
‘ஆந்திரா பைத்தியம்’ என்று
எங்களால்
பெயரிடப்பட்டவர்
அதே நகராட்சி குப்பைத்தொட்டியை ஆய்ந்து
தன் ஆணைக்குறியிட்டு
எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி
ஓடியது நாய்
மாடியில் விளையாடிய பொடுசுகளின்
கைநழுவி ‘அப்பாடா’ என்று
சாக்கடையில் வந்தமர்ந்தது பந்து
இவற்றுக்கிடையில்
நான் அவரை கவனிக்கிறேன்
என்பதையும் சேர்த்து கவனித்தார்
எங்களின் அத்தனை தனித்த
பேச்சொலிகளும் மூச்சொலிகளும்
ஒன்றாகி முழக்கமென இரைய
அத்தனைக்கும் மேலமர்ந்து
தன்னினிய குரலில் பாடியபடியே
எதிர்காற்றில் தன் மென்சிறகுகளால்
அந்தர வெளியின் பொன்மார்பில்
நமக்கெல்லாம்
புலப்படா ஓவத்தைத் தீட்டினார்
சொல்
சொல்
எப்படிச் சொல்வேன்
அறிதல் வெளிப்படும் சொல்லை
தவிப்புதான்
நாள் கணக்கில்
தவம் போல
வந்து விழும் சொல்லுக்காக
காத்துக் கிடக்கிறேன்
தவித்தலைந்து
கையறு நிலையில்
வந்தமர்ந்திருக்கையில்
வான் பொழியும் விரிமலர் போல
வந்து விழுகிறது சொல்
சொல் அகமொலிக்கையில்
தூக்கம் தொலைந்துவிடுகிறது
உடல் களைப்பு மாய்ந்துவிடுகிறது
பித்து போல
திரும்பத் திரும்பச் சொல்லி
கிளியாகிறேன்
சொல்
சொல்லாக
சொல்லிச் சொல்லி
கூத்தாடுகிறேன்
அனைவர் முன்பும் யாருமறியாமல்
சொல் தரும் வானே
எப்போதும் உம் குழந்தைமேல்
உமது பெருங்கருணை
பெருமழையெனப் பொழியட்டுமே
தர்மம்
பசி
அனல் எரிகிறது
என்றேன்
மீன் பிடிக்க போகலாம்
என்றார் அவர்
வழி நெடுக
வயிறு நிரையப்போகும் நினைப்பு
அழகிய குளம்
நீர்ச்செடிகளுக்கு இடையே
மீன் உணவு தேடிக்கொண்டிருந்தது
தூண்டிலிட்டு
அமர்ந்தோம்
முதலில் ஒரு மீன்
தூக்கி கூடையில் போட்டார்
வெள்ளியுடல் பலபலத்தது
அந்தத் துடிப்பைப் பார்த்தால்
மகிழ்ச்சிக்கும்
துயரத்துக்கும்
வேறுபாடு தெரியாத துடிப்பு
ஆனால்
அதன் கண்கள்
என்னவோ செய்தன
மீன் பிடிக்க வேண்டுமா
என்றேன்
என்னில் எதையோ உணர்ந்த
அவர்
எது உனக்கு தேவை
என்றார்
உணவு தான்
ஆனால்.....
அப்போது அதுவே தர்மம்
அடுத்த புழுக்கொக்கி
நீரில் விழுந்திருந்தது
இருந்தாலும்
என்னால் நிலைக்க இயலவில்லை
துடிக்கும் உயிர்
கண்கள் சிமிட்டியிருந்தாலும்
பரவாயில்லை
ஆனால்
நீர்மை கொண்ட
சிமிட்டா விழிகள்
அதைக் கண்டும்
காணாது இருக்க
பழகிக்கொள்ளத்தான் வேண்டுமா
தேன்
வண்ணத்துப் பூச்சி
ஏனது மலரை நோக்கியே வருகிறது
மலர் மணம் கொண்டிருப்பதா
மலர் தேன் கொண்டிருப்பதா
வண்ணத்துப் பூச்சிக்கு தேன் சுவைப்பதா
மலருக்கு அழகு போதவில்லையா
மணத்தால் மயக்குகிறது
தேன்சுவையால் இழுக்கிறது
இரண்டும் எதைத் தேடுகின்றன
புற்றெழத் தவமியற்றியவர்களின் கதைகள்
இம்மணுக்குப் புதிதல்ல என்றாலும்
யார் பார்த்ததுண்டு
யாருக்கேனும் பார்க்க வேண்டுமெனில்
இதோ
தவத்தில் புற்றெழ ஓருயிர்
பெருங்கருணையோ
ஊழின் நெறியோ
தவ வலியோ
புற்றவிழ மலர்ந்தது மலர்
மலரிடம்
வண்ணத்துப் பூச்சியும்
தவம் கொண்டு
அருகமர்ந்து
உணர்ந்தொழிந்து பெறுவது எதை
இருவரும் எதைத் தேடினரோ அதை
தேன்
பெற்ற பிறகு
மலரிலிருந்து மணம் எழுந்ததும்
வண்ணத்துப் பூச்சி சென்றமர்ந்து
மலரிலிருந்து மலர் எழுந்தது
நந்தி
படுத்துக் களைத்து
எழுவதற்காக
முன்னங்காலில் ஒன்றை
முன்னால் வளைத்தும்
நாசி துழாவும் நாவுடன்
வால்
சுழன்று படிந்தும்
உறைந்து நிற்கிறார்
நந்தி
தலையில் வைத்த
ஒற்றை இலை துணைகொண்ட
செம்பருத்தியை
விழாது தாங்க வேண்டும்
என்று
ஒரு தொடுகையில்
சொல்லிவிட்டுப் போன
பாப்பாவுக்காக
நல்லாள்
ஒருபோதும்
கண்களுக்கு அகப்படாத
அகன்று விரிந்த உரு
மெல்ல வாய் திறக்கிறது
தவித்த வாய்கள்
தணிந்து செல்கின்றன
காலத்துக்கும்
பேணுவதன்றி
பெற்றவள் செய்வதற்கு
ஒன்றுமில்லையே
ஒன்றுமில்லாதவள்
ஏன் பெற்றாள் ?
இது என்ன கேள்வி
பெறுவதே நியதி
பெறுவதே உவகை
பெறுவதே வரம்
நீர்
நான்
தூண்டில் போடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
மீன்
மாட்டுகிறதோ இல்லையோ
ஒவ்வொரு முறையும்
நீர்
மட்டும்
மாட்டிக்கொள்கிறது
முக்காலியா
முக்காலியா நான்
சரி உனக்கு என்னை
அப்படித்தானே அறிமுகம்
செய்துவைத்தாள் உன் அன்னை
இன்று நான்
இவ்வுருவில்
இங்கிருக்கிறேன்
உனது பாட்டி பிறந்திருந்த
பொழுதுகளில்
உயிர் உதிப்பில் அகஞ்சிலிர்த்து
ஆடிக்கொண்டிருந்தேன்
அவள் துள்ளி விளையாட
நிழலும்
சிறுகுருவிகள் சிறகுளர்த்த
தோளும்
கொடுத்துப் பேணிக்கொண்டிருந்தேன்
பூத்துக் கனிந்தவிட்டிருந்த நான்
அவளுக்கு சடங்கென ஆவதற்கு
முன்பே முக்காலி
பிறப்பெடுத்துவிட்டேன்
பூத்தவளின் கன்னிமையை கண்ணொற்றி
நான் மடியேற்றி அமர்த்திக்கொண்டேன்
ஆறேழு தலைமுறைகளையும் கண்டுவிட்டேன்
உனது பாட்டியை நீ அறியமாட்டாய்
என்னையும் நீ ஒரு பொருட்டாக
எண்ணப்போவதுமில்லை
இருந்தாலும்
உனக்கென்று என்னால் அளிக்க
சில உள்ளன
விருப்பமிருந்து கொஞ்சம் எனது
கதகதப்புக்கு உன் கைகளைக் கொடுத்தால்
நீ உணர்ந்துகொள்வாய்
உனது மூதன்னையின்
கனிந்த கைகளின் தொடுகையை
என்னில் பூத்துதிர்ந்த
மலர்களின் நன்னறு மணத்தை
இப்புடவியின் உயிர் தொடர்ச்சியை
வரம்
மெத்தென மெல்லுடல்
மலரோடுதான் உவமிக்கப்படுமோ
எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது
அருநிகழ்வு தான்
எந்தன் கைகளின் மேல்
நிகழ நிகழ நெகிழ்ச்சி
இந்த நெகிழ்ச்சிக்காகவே
என்னையும்
நெகிழ்ந்தேந்தினரோ
நெகிழ்ச்சியை கையேந்தி அளிக்கவே
நிகழ்ந்தேனோ
நம்மைப் புவியும்
புவியை மண்டலமும்
அதனை வெளியும்
புடவியை
யார் ஏந்தி நெகிழ்ந்தார்
பிள்ளைகள் தன் பிள்ளைகளை
நோக்கியே தவமிருக்கின்றன
இதுவே அளிக்கப்பட்ட வரமோ
இந்த வரமன்றி
எஞ்சுவது வேறென்ன
விதை
விதை
அது தன்னை மறைத்துக்கொள்வதில்
இருந்தே
புத்துருக்கொள்கிறது
உருக்கொள்ளாது மறைந்த விதைகள்
என்றென்றைக்குமான
மாறாத உருவை அடைந்துவிடுகின்றன
நமக்காக
மாறாப் புன்னகையோடு
நமக்காகவே உருக்கொள்ளும்
சிறுவிதை
ஏனித்தனை எடை கொண்டதாக ஆகிறது
எடை கொள்ளும்போதே
வலுக்கொள்கிறது
ஆழ்ந்து அமைகிறது
தவிர்க்கவியலா இடத்தையும்
அடைகிறது
அத்தகையதொரு விதை
என்னுள்ளத்துள்ளும் மறைந்தமையட்டும்
எடைகொள்ளட்டும்
வலுக்கொள்ளட்டும்
ஆழ்ந்தமையட்டும்
துளிர்த்து கிளைபரப்பி
மலர்ந்து மணம் வீசட்டும்
No comments:
Post a Comment