Tuesday, March 3, 2020

சிவப்பு - சிறுகதை_ நரேந்திரன்


சிவப்பு
1
நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன். ஆனால் அந்த பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர்கள் என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு அச்சமும் அவமானமாகவும் இருந்தது. எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இது எந்த இடம் என்று கூட புலப்படவில்லை. நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத இடம். சுற்றிலும் கட்டிடங்கள் காடுகள் போல் அடர்ந்திருந்தது. அதன் ஊடாக அமைந்திருந்த நடைமேடை முழுவதும் மனிதர்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடை இதுவே வாழ்வின் கடைசி நடை என்பது போல் மிக ஆழ்ந்தும் கவனத்துடன் கூடியதாக இருந்தது. அதில் ஒருவர் கூட சேர்ந்தாற்போல் நடக்கவில்லை. அனைவரும் தனித்தே நடந்து கொண்டிருந்தனர். நான் அவர்களை மிரட்சி உடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களின் உடை அனைத்தும் ஏதோ உயர்குடி விருந்திற்கு அணியப்படும் ஆடைகளை ஒத்திருந்தது.
அந்நொடியின் இருப்பை என்னுள் உணர்ந்தவுடன், ஒரு மெல்லிய அச்சம் என்னுள் பரவ தொடங்கியது. மழைத்தூறல் போல் சிரியதாக என்னுள் எழுந்த அச்சம் கனமழையின் அடர்வுடன் என் உடல் முழுவது பரவியது.என்னையும் மீறி நான் ஓட தொடங்கியிருந்தேன். அச்சமயத்தில் என்னுள் எந்த கடந்த காலமும் நினைவில் இல்லாததை உணர்ந்தேன். நான் யார் என்பதையும் என்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. மீள்வதற்கான எந்த அறிகுறியும் அங்கு தென்படவில்லை. களைத்து மூச்சிரைக்க நின்றவுடன் ஒரு மிகப்பெரும் வெறுமை என்னை பீடித்திருந்தது. திடீரென்று என்னுள் ஏற்பட்ட மூர்க்கத்துடன் அங்க என்னை கடந்து சென்ற ஒருவனை பலத்துடன் உலுக்கி,

நீங்களெல்லாம் யார்? இது என்ன இடம்? எதற்காக இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறீர்கள்?  என்று கத்தினேன். நான் அவ்வாறு கத்தியது எனக்கே என் குரல் வினோதமாக ஒலிப்பதை போலிருந்தது.

அவன் என்னை ஒரு வினாடி உற்று பார்த்து விட்டு உரக்க சிரித்தான். அப்போது என்னுள் ஒரு மிகப்பெரும் திகில் பரவியது. ஆம், அவன் பற்கள் சிவப்பேறியிருந்தன. அது ரத்தம் உறைந்த நிறத்தில் இருந்தது. நான் என்னை இழந்து மூர்ச்சையாகி இருந்தேன்.  
2

மயக்கம் தெளிந்த போது, கண்களை பறிக்கும் வெளிச்சத்துடன் கூடிய ஒரு அறையில் கிடத்தப்பட்டிருந்தேன் . கீழே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கட்டிலும் மெத்தையும் போன்றிருந்தது. என் மீது நோயாளிக்குரிய நீல நிற ஆடை உடுத்தப்பட்டிருத்தது. அறை சுத்தமாக இருந்தது. எங்கோ சிறிது தூரத்தில் ஒரு வித அறுவை எந்திரத்தின் ஒலியும், கதறல் போன்ற ஒலியும் காதை அறைந்தது. நான் எவ்வாறு இங்கே  வந்தேன்? என்று எண்ணங்களை தொகுக்க முயலும் போது  எதுவுமே நினைவில் இல்லை. அச்சமயத்தில் ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள். அவள் தோற்றம் ஒரு மருத்துவரை ஒத்திருந்தது. அவள் என்னை பார்த்து மெலிதாக ஒரு புன்னகை புரிந்தாள். அவள் என்னை நோக்கி வந்து,
"இப்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவளது குரல் கனிவுடன் கூடியதாக இருந்தது.

"பரவாயில்லை" என்றேன்.

"நான் எங்கிருக்கிறேன்?  நான் யார்?" என்று அவளிடம் கேட்டேன்.

அவள் இக்கேள்விக்கு பலமுறை பழக்கப்பட்டதிற்கான ஒரு பார்வையை என்னிடம் உதிர்த்துவிட்டு, அவள் கொண்டுவந்திருந்த மருந்தை என்னுள் செலுத்தினாள். நான் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான் உணர்ந்தேன் அந்த மருந்தும் சிவப்பாக இருந்ததை.

3

நான் இப்போது அந்த நடை மேடையில் நடந்து கொண்டிருந்தேன். அந்த நடை ஏதோ ஒரு மீளா சுழற்சி போல் நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் ஒரு உயர்குடி பெருமக்களுக்கு உண்டான உடையில் இருந்தேன். அந்த நடை திரும்ப திரும்ப ஒரே இடத்தை சுற்றி சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை எனது அகம் உணர்ந்த போதிலும் என்னால் அந்த நடையை நிறுத்த முடியவில்லை.
தீடீரென்று என்னை யாரோ உலுக்குவது போல் இருந்ததது. நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒருவன் என் முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான்.



No comments:

Post a Comment