Monday, February 11, 2019

மண் - சிறுகதை - லோகேஷ் ரகுராம்


நான் வேலைக்கு வெளியூர் செல்லவதாக இருந்தேன். அங்கேயே செட்டில் ஆகிவிடுவதாகத்தான் முடிவு. வீடு பார்த்து வைத்திருந்தேன். மரியாதைக்காக ஒரு எட்டு அவரிடம் சொல்லிவிட்டு வரலாம் என்றிருந்தது.
சாஸ்தா கோயிலின் கீழைப்பக்கம் திரும்பி வயல் வரப்புகளைத் தாண்டிச்சென்று தென்னங்கொல்லைக்கு நடுவே அவரின் ஓட்டு வீடு. மண் ரோட்டில் சென்றால் வயலைச் சுற்றிச்செல்ல வேண்டும். அதற்கு நேரமாகும். அதனால் வரப்பில் நடக்கலாம் என்று நடந்தேன். முதல் நாள் இரவு மழைப் பெய்து இருந்தது. கடைசி வரப்பைத் தாண்டும் போது வரப்பின் ஓரத்தில் கால் வைத்துவிட்டேன். என் கால் சறுக்கி சகதியில் சிக்கியது.
காலைச் சேற்றில் இருந்து விடுவித்துக்கொண்டு அந்த ஒற்றைச் செருப்பில் அத்தனை கனத்துடன் நடந்தேன்.
அவரது வீட்டின் முற்றத்து பைப்படியில் காலைக் கழுவிக்கொண்டு என் செருப்பைக் கழுவினேன்.
“என்னது இப்படி ஒருப்படி சேத்த அள்ளிகிட்டு வந்துருக்க!” என்று வந்தாள் பாட்டி. அதாவது அந்த கிழவரின் மனைவி.
என்னைப் பார்த்த அந்தக் கிழவர். “எதுக்கு வந்துருக்கான் தெரியுமா?” என்று அவளிடம் திரும்பி கேட்டார்.
பின்னர் “தொர, இந்த ஊர்ல ஜோலி இல்லன்னுட்டு வெளியூர் போகப்போறாராம். வெளியூர்னா அம்பது மைல் குள்ள இல்ல. எரநூத்தம்பது மைல் தாண்டி. பெங்களூரு.” என்று பாட்டியிடம் அரக்கப்பறத்தார்.
“ம்ம்ம்.” என்று இழுத்தாள் பாட்டி.
நான் கரகரவென்று பைப்படியில் என் செருப்பை தேய்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சகதி போனபாடில்லை.
“ஒஞ்செருப்புக்கு அந்த மண்ணுமேல இருக்குற பத்துதல் கூட ஒனக்கு இல்லாம ஆய்ருச்சே” என்று என் செயலைப் பார்த்து நகைத்தார், அந்தக் கிறுக்குக் கிழவர்.
நான் எதுவும் பேசவில்லை. பேசினால் விதண்டாவாதம் வரும். இது கணேச மாமா வீட்டுத் திண்ணையில்லை வம்பளக்க. எப்படியும் சாயுங்காலம் அங்கு அவர் வருவார்.
செருப்பைக் ஒருவழியாக கழுவிய பிறகு, நான் “போய்டு வரேன் பாட்டி. பாத்துக்கோங்க” என்று சொல்லிகொண்டேன்.
“காணாத களங்காணப் போற. அத்தனையும் பாத்துட்டு ஊர்வந்து சேரு ராசா” என்றாள் அவள்.
மரியாதைக்காக அவரிடமும் சொல்லிக்கொண்டேன்.
அவர் என் காதறுகில் வந்து கிசுகிசுத்தார்.
“நம்மூர் பேரச் சொல்லும்போது ஒன் ஒடம்புல இருக்கற கடைசி மசூரும் கூச்சமத்து என்னிக்கு நிக்காம போவுதோ அன்னிக்கு நீ செத்துட்டனு நெனச்சுக்க” என்றார்.
அதை அவர் கொஞ்சம் வில்லத்தொனியில் தான் சொன்னார். சபிப்பது போல இருந்தது.
இந்த மனுசனுக்கு எதுக்கு இத்தன வஞ்சம், வக்கிரம் என்று அவரைத் திட்டிக்கொண்டே வேகமாக நடந்தேன். இந்த முறை மண் ரோட்டில் தான்.
மாலை கணேச மாமா வீட்டுத்திண்ணையில் நான் சென்று உறங்கினேன். ஐந்து மணி வாக்கில் மேய்ச்சலுக்காக போய்விட்டு திரும்பி வந்தவர் மாடுகளை அவர் வீட்டுத் திசையில் விரட்டிவிட்டு திண்ணையில் வந்தமர்ந்தார்.
“என்னடா, இன்னும் ஒறக்கம் வேண்டி கெடக்கு” என்று மேய்ச்சலுக்கான வைத்திருந்த தடியால் என் பின்னாடி தட்டினார்.
வெளியில் நால்வருடன் பேசிக்கொண்டிருந்த கணேச மாமா அவர்களை வழியனுப்பி விட்டு
“யோவ் கூர் கெட்ட கெழவரே, அவனப் போய் ஏன் சீண்டுறீர். நாளைக்கு ஊரவிட்டு போகப் போறான். ஒறங்கட்டும் வுடும்” என்றார்.
“அது சரி. யாரு அவனுவலாம்” என்று வந்துபோனவர்களைப் பற்றி கேட்டார்.
“அதான பாத்தேன். ஊரான் வூட்டு கொல்லைய எட்டிப் பாக்காம ஒனக்கு சோறு தொண்டயெறங்காதே” என்றார் கணேச மாமா.
பின்னர் அவரே விஷயத்தை சொன்னார்.
“அந்த மேக்கால பஸ் ஸ்டாப் பக்கம் எனக்கு ரெண்டு செண்டு நெலம் கெடக்குல்ல. அத விக்கலாம் னு இருக்கேன்.
கருவேல முள்ளா அடஞ்சு கெடக்கு. பிரயோசனப் படல. விசாரிச்சேன். கடை வச்சுக்கறேன்னு வந்து கேட்டானுவ. அதான் கிரயம் பண்ணி தர்றதா சொல்லிருக்கேன்”
அதைக் கேட்ட அந்தக் கிழவர். குரலை உயர்த்தினார்.
“அடத் தத்தாரிப் பய மவனே.
ஒன் நெலத்த வேற ஒருத்தனுக்கு குடு வேணாங்கல. ஆனா வெள்ளாம பாக்குறவனுக்கா குடு.
கடையெழுப்புறவன்ட கொடுக்கறேங்கற”
“யோவ், அந்த நெலம் துண்டா தனியா கெடக்கு அங்க.
அதுல இவரு வெள்ளாம பாத்து அறுத்து தள்ளிருவீராக்கோம்.
வந்த வரை லாபம்’ ன்டு போவியா” என்றார்.
நான் நல்ல வேலை என் பஞ்சாயத்தில்லை என்று எண்ணிக்கொண்டேன்.
“எல நான் மண்ணறிஞ்சவன் மனசறிஞ்சவன் பாத்துக்கோ.
காக்காணி நெலத்துக்கு வக்கில்லாத சீவன் இருந்தா என்ன செத்தா என்னனு நம்புறவன்.
நெலம்னா அதுக்கு உயிர்ப்பு இருக்கணும். என்னிக்குன்னாலும் ஒரு உசுர மேல எழுப்புற அனுட்டானம் அதுக்குண்டு.
ஒன் கான்கிரீட்டு அதச்செய்யுமா?” என்று கரகரத்தார் அந்தக் கிழவர்.
“உன் வேல என்னவோ அதப்பாத்துட்டு போவீராக்கும்” என்று சினந்துகொண்டார் கணேச மாமா.
“உனக்கு இப்ப புரிபடாது டா” என்று எழுந்து,
என் தாடையைப் பிடித்து ஆட்டிவிட்டு
“கழுவுற மீனுல நழுவுற மீனு கணக்கா இன்னிக்கு நீ நழுவிட்ட மவனே. நாளைக்கு பஸ் ஏத்திவுட வாரேன்” என்று வேகு வேகென்று நடந்தார்.
அத்தகைய மூப்பிலும் தளர்விலும் தன் நடையால் நிலத்தை அளந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
பொழுது சாயத்தொடங்கியிருந்தது.
மறுநாள் மதியம் பேருந்தேறி பெங்களூர் அடைந்தேன்.
பார்த்து வைத்த புதிய வீட்டைத் திறந்து நுழைவதற்கு முன்பு
என் செருப்பைக் கழற்றுகையில் மொஸைக் தரையில் கரகர வென மணற்துகள்கள் சிதறியிருப்பதை உணர்ந்தேன்.
என் செருப்பின் பின்பகுதியைத் திருப்பிப்பார்த்தேன்.
செருப்பின் சோல் இடுக்குகளில் ஒரு வில்லை சகதி உலர்ந்து எஞ்சியிருந்தது.
“என் மண்” என்று எண்ணிக்கொண்டேன்.
அது முதல் ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்புகையில் அப்படிப் பார்ப்பது வழக்கமாய் மாறிப்போயிருந்தது.
இன்று அந்தக்கிழவரை நான் நினைவால் மீட்டிக்கொள்கிறேன்.
இந்தச் செய்தியை வாசித்து விட்டு
“கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டிய திருச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதே வண்டியில் இளநீர் ஏற்றி அனுப்பிய டெல்டா மக்கள்.”
இதைச் சொல்லி அவரிடம் அழ வேண்டும் என்று தோன்றுகிறது.
இதைக் கேட்டு அவர்
“மண்ணு தான் மனுசன் வெதச்ச தென்னையில ஏறி நின்னு எளணீல தண்ணியா இனிக்குது” என்று சொல்லி என்னை ஆற்றுப்படுத்தக்கூடும்.
“இப்படி புயல் வந்து எல்லாத்தயும் புடுங்கிப் போட்டுட்டுதே தாத்தா” என்றேன்.
“புயலோ மழையோ வந்தா என்னடா எல்லாஞ் சரிஞ்சு இந்த மண்ணு மேல தான கெடக்கு.
எல்லாமும் அழுகி மக்கி நாளைக்கு இந்த பூமி மேல ஒரு பச்ச தலக்காட்டும். அது போதும் டா மொத்த சனமும் மீள. மண்ணு மனுசன என்னிக்கும் கைவிடுறதில்ல” என்றவர் மறைந்தார்.
அந்த மண்ணே அந்த மனிதராக வந்தது போல் இருந்தது.
மண்ணிற்குத் தேவை மனிதன் தான். வேறெதுவும் வேண்டாம்.
அவர் சொன்ன இனிப்பிலும் பச்சையிலும் நாம் மீண்டுவிடலாம். இயற்கை இது போன்ற ஏதோ ஒரு கனிவை நமக்கு காட்டாமல் விடாது.
என் உணர்வுகளை சொல்லாக்கிவிட்டேன். செயல் படமுடியாமல் இங்கிருந்து தடுமாறுகிறேன். அந்த குற்றவுணர்வுடன் என் நிலத்து மக்களுக்கு உதவும் அத்துணை வெளிக்கரங்களுக்கும் என் சிரந்தாழ்கிறேன்.

No comments:

Post a Comment