Monday, February 11, 2019

அது நீ – சிறுகதை - லோகேஷ் ரகுராம்


·        





·        
இருட்டில் இப்பிரபஞ்ச பிரவாகத்தில் புரிபடாத மூலையில் மண்டியிட்டு அமர்ந்து விம்மி விசும்பி அழுதுகொண்டிருந்தேன். என் அழுகையால் நீண்டுகொண்டே இருந்தது இரவு. இரவுகள் அழுகைகளுக்கானவை என்பது ஏற்றுக்கொள்ளும்படி தான் இருக்கிறது. என் கண்ணீரைத் திரட்டித் திரட்டி ஒளிகொள்ளச்செய்தாலே ஒழிய பகல் சாத்தியம் இல்லை. என் கண்ணீர் கரித்துக் கரிந்து இரவென மாறியது.
அப்போது தான் என் அறை கதவு தட்டப்படும் சத்தம் ஒலித்தது.
“நான் வரலாமா?” என்று இங்கீதத்துடன் எழுந்தது அந்தக் குரல்.
“மானுடரின் மனதறைக்கு தாழில்லை. நீங்கள் தாராளமாக உள் நுழையலாம்” என்றேன்.
அவர் உள் நுழைந்தார். வெள்ளை நிற அங்கி உடல் வழிய செம்மண் நிறத் தலைமயிர் தோள் வழிய அருங்குறுந்தாடி தாடை வழிய நின்றார் அவர்.
அவர் கண்களில் வழிவது மட்டும் என்ன? புரிபடவில்லை.
“உன் விசும்பல் என்னைச் சீண்டுகிறது. அழாதே.” என்றார்.
“என் விசும்பல் எப்படி உங்களுக்கு ஒலித்தது?
“உன் விசும்பல் ஒலி என் விசும்பறைந்தது. என் நிசப்த வானத்தில் எழுந்த விரிசலாய் உன் சப்தம். மண்ணிலிருந்து எய்தபட்டது என்றறிந்தேன். மண்ணிறங்கினேன்.” என்றார்
“அப்படியானால் யார் நீங்கள்?” என்றேன்.
“இயேசு” என்றார்.
“எந்த இயேசு? ஆண்டவராகிய இயேசு வா” என்றேன். “என் விசும்பல் கேட்டு விண்ணைவிட்டு இகலோகம் இறங்கினீரா?”
அதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லை. அவரது வெள்ளை நிற மேலங்கியில் அவரது மார்புக்கு அருகே ஒரு உயிரசைவு தெரிந்தது. அது அவரது இருதயதுடிப்பு என்று மருட்சியைத் தந்தது ஒரு கணம். மறு கணம் அந்த மருட்சி தன் கழுத்தை வெளி நீட்டியது. தூய வெள்ளை நிற ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டியின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே அவர் இருந்தார்.
“அசடரே. என்னவென்று கேட்கவந்தீரா? இல்லை உங்களைப் போல இன்னொரு அசடனைப் பார்க்கவந்தீரா?” என்று ததும்பினேன்.
அவரது முகம் ஒரு துளி முறுவலுக்குப் பின் பெரிதாக எதையும் வெளிகாட்டாது இருந்தது. அவர் என்னை அசட்டையாக எண்ணியிருக்கலாம்.
“பாருங்கள். என் துயரை. உங்கள் கல்வாரி மலையின் குகை இருட்டை. நீர் தான் என் மீட்பரோ? “
“நீங்கள் உண்மையாகவே தேவகுமாரரா ? மனித வடிவில் தரையிறங்கிய தேவனோ? உங்களை நீங்கள் மனித குமாரனாக தானே முன்மொழிகிறீர்கள்.”
“ஒன்று சொல்லட்டுமா? உங்கள் பிறப்பினால் ஏற்பட்ட இரத்தக் கறையை துடைப்பதற்காகவே உங்கள் மொத்த பிறவியையும் செலவிட்டீர்கள். ஆம். ‘உலகத்தின் மீட்பர்’ என்று சொல்லப்படும் நீங்கள் பிறந்த போது, “புனிதம்” பிறந்தது என்றனர். ஆனால் பாவமும் சேர்ந்தே பிறந்தது உங்களுடன். உங்களால். உங்கள் பிறப்புச் சங்கதியை அறிந்த ஏரோது மன்னன் அவன் நாட்டில் அன்று பிறந்த அத்தனை குழந்தைகளையும் அவன் வாளிற்கு இரையாக்கினானே!”
“பாவத்தின் தீக்கங்கு உங்கள் புனிதத்திற்கு முன்பிலிருந்தே கொழுந்தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு புனிதரின் பிறப்பு ஏன் ஒருவரை அப்படி கொதிப்படையச் செய்ய வேண்டும். இதுவா புனிதம் என்பது? ஒன்றை புனிதமென்று பாவத்தைக் கொண்டே தான் அறிய முடியுமா என்ன?”
“ ‘இயேசு’ புனிதம் என்றால், ஏரோது மன்னனிடம் எழுந்த ‘இயேசு என்கிற சிந்தை’ ஒரு பாவம். அந்த பாவத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்றேன்.
“உங்களை ப்ரஸ்தாபிக்க நீங்களே அரங்கேற்றிய நாடகம் அது. பாவமென்ற நாடகத்தை நடத்தி புனிதர் பட்டம் பெற்றுக் கொண்டீர்கள். உங்கள் பிறப்பு ஏன் ஒரு மொட்டு நவிழ்வது போல சத்தமில்லாமல் இருந்திருந்து உலக பாவங்களை நீங்கள் சுமந்திருக்கக் கூடாது. இதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா?”
“என்னால் ‘உங்களினால் ஏற்பட்ட அந்த குழந்தைகளின் இரத்த கறையைக் கழுவவே உங்கள் மீதி வாழ்க்கை’ என்று நிறுவ முடியும். அதற்காகவே சிலுவை அரங்கில் ஏறினீர்கள். ஆணியறைந்த உங்கள் கைகளை முகர்ந்து பாரும் ஐயா, என் தேவனே, அந்தப் பச்சிளங் குழந்தைகளின் குருதி வீச்சம் அடிக்கும்.”
“உங்களை மீட்கவே ஒரு ஜென்மம் பத்தாது. இதில் உலக மீட்பு எப்படிச் சாத்தியம்?”
“உன்னை உலகத்தின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப் பண்ணுவேன் என்று நீங்கள் சொல்வதாய் வேதம் சொல்கிறது. நான் கேட்கிறேன். எது ஐயா, உயர்ந்த இடம்? உங்கள் முன் மண்டியிடுவதா? என்னைப் போன்றவருக்கு, மிஞ்சிப் போனால் ‘மண்டியிடுவது’, மீறி நின்றால் ‘சிலுவைப்பாடு’, இதற்கு இடைப்பட்ட எந்த நிலையும் வாய்க்கப்படவில்லையே.” அவர் என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார்.
“என்னைப் போன்ற அவிசுவாசிகளுக்கு உங்கள் அகத்தில் இடமில்லை என்பதை நான் நன்கறிவேன்” என்றேன்.
“மானுட உள்ளத்தில் எழும் இது போன்ற எண்ணங்களும் அதன் பொருட்டு எழப்பெற்ற தருக்கங்களின் கூட்டு விளைவு தான் நான். என்னைப் புரிந்து கொள்ள உனக்கு இப்போது இது மட்டும் போதும்.” என்றவர் “நீ யார்?” என்றார்.
“அசடரே, என்னை யாரென்று அறியாதவரா நீங்கள். சொல்கிறேன் நான் யாரென்பதை. உங்களால் உங்களது திருப்பெயரால் வீழ்த்தப்பட்டார்களே ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் அதில் ஒற்றை குழந்தையின் ஓலம் தான் நான். உங்களை மண்ணிறங்கி வரவைத்த ஓலம் அதுதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.”
“உயிர்த்தெழுதல் உங்களுக்கான செயல்பாடு மட்டும் இல்லை.  உலகை ரட்சிக்க நீங்கள் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்கள். நான் கொல்லப்பட்ட அந்நாளே உயிர்த்தெழுந்து விட்டேன். இது புறக்கணிப்பின் உயிர்த்தெழல். ஏன் இறந்தோம் என்ற நிராகரிப்பின் உயிர்த்தெழல். இந்த ஒற்றைக் கேள்வியுடன் உங்கள் முன் மண்டியிட்டிருக்கிறேன்” என்று கூறி அவர் முன் அழுவதைத் தொடர்ந்தேன்.
“அழு அழு உன் கண்கள் வற்றும் வரை அழு. உன் நாவில் எழும் சொல்லும் வற்றுமளவு அழு” என்று என்னைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்பு அவர் முன் நா எழவில்லை. எஞ்சியிருந்த சொற்களை கண்ணீராய்க் கரைத்துக்கொண்டிருந்தேன்.
அவர் கைகளில் இருந்த அந்த ஆட்டுக்குட்டி சடாரென்று என் கைகளுக்கு தாவியது. பின்னர் “இங்கு நான் என்பவன் நானல்ல…” என்று சொல்லி மறைந்து போனார்.
என் மனதறையின் சுவரில் அறையப்பட்டிருந்த அவரது படத்தில், வெளியிலிருந்து எழுந்த எதோ ஒரு ஒளித்தீற்றல் வெளிச்சத்தில், அவரின் மேல் நோக்கி எழுந்திருந்த வலது கை ஆட்காட்டி விரல் திசைமாறி என்னைச் சுட்டுவது போல் இருந்தது.
பின்னர் மண்டியிட்ட நான் எழுந்து பல அடுக்குகளைக் கடந்து வெளியே வந்தேன். பெத்லகேம் நகரம் அன்று இரவு சுடர் கொண்டது. வான வேடிக்கைகள் விண்ணை அதிர்த்தின. திராட்சை ரசத்தின் வாசம் அந்த நகர் முழுதும் சூழ்கொண்டது. தள்ளாடிய மக்கள் ஒவ்வொருவரும் ‘இயேசு பிறந்துவிட்டார். இயேசு பிறந்துவிட்டார்’ என்று ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர்.
நான் என் மடியில் இருந்த ஆட்டுக்குட்டியின் தலையை வருடிக்கொண்டே அந்த தெருக்களில் அலைந்தேன். அவர் விட்டுச் சென்ற வருடலின் இதம் அதன் தலையில் இன்னும் எஞ்சியிருந்தது.

No comments:

Post a Comment