தொடரும்
நடிப்பு
‘நாம
ஒன்னும் ஜட்ஜஸுக்காக நாடகம் நடத்தல. ஆடியன்ஸுக்காக நடத்தறோம். நம்ம நடிப்பப் பார்த்து
மார்க் போடுறதுக்கு ஜட்ஜஸுக்கு என்ன தகுதி இருக்கு? வெற்றி தோல்விய பத்தி கவலப்படாதிங்க.
நமக்கு ஆடியன்ஸோட கைதட்டல்கள் தான் முக்கியம். அதுதான் நமக்கு கிடைக்குற உண்மையான அங்கீகாரம்!’
இந்தப்
பொய்யை முதன்முறையாக கேட்டு இரண்டு வருடங்கள் ஆறு மாதங்கள் முப்பத்திரண்டு நாட்கள்
ஆகியிருந்தன. இது பொய்யென்று எனக்குத் தெரிந்து பத்து மாதங்கள் பன்னிரண்டு நாட்கள்
ஆகியிருந்தன.
இந்தப்
பொய் மட்டுமல்ல. அவர்கள் சொல்வதில் நூற்றில் தொண்ணூறு சதவிகிதம் பொய் மட்டுமே என்பது
எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தெரிய வந்தது. எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள்?
போட்டியில் தோற்றுவிட்டால், அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால்
போகிறது. எதற்காக நாடகம் முடிந்த பின்னரும் நடிக்க வேண்டும்?
”அப்ப
தான் டா ஜூனியர்ஸ் நம்ம டீம் விட்டுப் போக மாட்டாங்க!” என்று என் சீனியர் ப்ரீத்தம்
எனக்கு விளக்கம் கொடுத்தான். எனக்கு அது போதவில்லை. தோல்வி தரும் கவலையை மறைக்க கூறப்படும்
ஆறுதல் அது என்று தோன்றியது. அவை வெறும் சொற்களே. கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது.
நான்
சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றால் இவர்கள்
இதை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். அடுத்த போட்டி வரும்வரை வெற்றியைக் கொண்டாடிக் கொண்டே
இருப்பார்கள்.
யார்
நாங்கள்? ‘ட்ரீம் பிக் தியேட்டர் புரொடக்ஷன்ஸ்’ அணியின் உறுப்பினர்கள். ‘ப்ரொபஸனல் ஸ்டடீஸ்’ டிபார்ட்மெண்ட் மாணவர்கள். ஒவ்வொரு
டிபார்ட்மெண்ட்டிற்கும் ஒவ்வொரு தியேட்டர் அணி இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் நடக்கும்
‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் அனைத்து டிபார்ட்மெண்ட் மாணவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
இரண்டு
நாட்கள் தொடர்ந்து நடக்கும் நாடகப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று தியேட்டர் அணிகளுக்கு
ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்ற இன்ஸ்டிட்டியூட்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு
கிடைக்கும். ஆதலால், ‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கு வர அனைத்து
தியேட்டர் அணிகளும் கடுமையாக உழைப்பார்கள்.
”வெல்கம்
டூ ட்ரீம் பிக் தியேட்டர் புரொடக்ஷன்ஸ். வி ஆர் நாட் அ டீம். வி வொர்க் ஹியர் ஆஸ் அ
ஃபேமிலி” என்று சொல்லி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தியேட்டர் பற்றி அறிமுகம் செய்து
வைப்பார்கள்.
இதில்
மட்டுமே உண்மை இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும். ஏனென்றால் இவர்கள் சொல்லும் ஃபேமிலியில்
மொத்தம் நாற்பது பேர். அதில் முப்பது பேர்களின் பெயர்கள் ‘திவாரி, பாண்டே, கபூர், சிங்’
இதில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே முடியும்.
மீதமுள்ள
பத்து பேர்கள் டிபார்ட்மெண்ட்டின் பிரதிநிதிகள் மட்டுமல்ல. தென்னிந்தியாவிற்கே அவர்கள்
தான் பிரிதிநிதிகள். நான் அந்தப் பத்தில் ஒருவன். என் பெயர் கலைச்செல்வன்.
இயக்குனர்,
நடிகர்கள், நாட்டியக்காரர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கதை வசனம் எழுதுபவர்கள்,
ஆடை வடிவமைப்பாளர்கள், காட்சிக்கு தேவையான ப்ராப்பர்ட்டிஸ் டிசைன் செய்பவர்கள் மற்றும்
லைட்ஸ் கையாளுபவர்கள் என எங்கள் அணியில் மொத்தம் நாற்பது பேர். ஒப்பனைக்கு என்று யாரையும்
தனியாக வைத்துக் கொள்வதில்லை.
இந்த
நாற்பது பேர்களில் மூன்று ஆண்டு மாணவர்களும் அடக்கம்.
மூன்றாம்
ஆண்டு மாணவர்களே சூப்பர் சீனியர்ஸ். அவர்களே அணிக்குத் தலைமை தாங்குபவர்கள். அவர்கள்
பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.
இரண்டாம்
ஆண்டு மாணவர்களே சீனியர்ஸ். மூன்றாம் ஆண்டில் அணிக்கு தலைமை ஏற்க உள்ளவர்களாதலால் பொறுப்புடன்
நடந்து கொள்பவர்கள்.
முதலாம்
ஆண்டு பயிலும் மாணவர்களே ஜூனியர்ஸ். பொய்களை நம்பும் அப்பாவிகள் என்றும் சொல்லலாம்.
ஃபைனல் இயர் பேட்ச் பாஸாகி சென்றுவிட்டால் அணியில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவது
இவர்களே.
‘திறமை
உள்ளவர்களுக்கு மட்டுமே டீமில் இடம் உண்டு’ என்று அவர்களிடம் சட்டம் பேசுவார்கள். நாடகத்தில்
விருப்பம் உள்ள எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆடிஷன்ஸ் வைத்தே தேர்வு
செய்வார்கள். எப்பேர்பட்ட நுழைவுத்தேர்வுகளிலும் கூட பாஸ் ஆகிவிடலாம். ஆனால், இதில்
தேர்வாவது சற்றுக் கடினமானது. யாரை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அவர்கள்
இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
ஏனெனில்,
திறமை உள்ளவர்களும் தேர்வு ஆவார்கள். திறமை இல்லாதவர்களும் தேர்வு ஆவார்கள். தேர்வானவர்களுள்
நடிகர்கள் படும் பாட்டை எழுதித் தீர்க்க முடியாது.
அவர்களின்
முதல் அரங்கேற்றம் ஒருபோதும் அரங்கேற்றமாக இருக்காது. வேண்டுமென்றால் அதை ‘அரங்கிறக்கம்’
என்று சொல்லிக் கொள்ளலாம். மேடையின் ஓரத்தில் நிற்கும் வாய்ப்பையே முதலில் பெறுவார்கள்.
சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இருப்பார்களே! அவர்கள் நிலைமை தான் இந்த ஜூனியர்ஸ்களுக்கும்.
மேடையின்
வெளிச்சமற்ற இடத்தில் நிற்கும் அவர்களுக்கு நாடகத்தில் ஒரு வரி வசனம் கிடைப்பதே அபூர்வம்.
உண்மையில் அதற்கு அவர்கள் தவம் இருந்தே ஆக வேண்டும்.
ஒரு
வருட அனுபவத்துடன் அவர்கள் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் சிறிது வெளிச்சம்
அவர்கள் மீது படும். கதாநாயகன் பாத்திரம் கிடைக்காது தான். ஆனாலும், நாடகத்தில் வரும்
சில முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
வெளிச்சமற்ற
இடத்தில் நின்றவன் மேல் சிறிது மங்கலான வெளிச்சம் படும். அதைப் பயன்படுத்திக் கொள்வது
அவனவன் திறமையைப் பொறுத்தே. இப்படியே இரண்டு ஆண்டு காலம் தவம் முடிவடைந்ததும் முதன்முறையாக
கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வரும். தவத்திற்கு கிடைக்கும் பலன் அதுதான்.
மேடையின்
முழு வெளிச்சமும் அவன் மீது படும். மேடையை ஆளும் தருணம் அது. உண்மையான நடிகன் அத்தருணத்தில்
தன் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்காட்டி பாராட்டுப் பெற வேண்டும் என்று நினைக்க
மாட்டான். தன்னையும் மறந்து கதாப்பாத்திரத்தில் லயித்துக் கிடப்பவனே உண்மையான நடிகன்.
ஒத்திகையில்
மட்டுமல்ல. ஒப்பனை செய்துகொள்ளும் போதும் அவன் நடித்துப் பார்த்துக் கொள்கிறான். மூன்றாம்
ஆண்டில் தான் நடிக்கும் நாடகத்தில் கதாநாயகப் பாத்திரம் கிடைப்பதே அவனுக்கு கிடைக்கும்
முதல் அங்கீகாரம். பார்வையாளர்களின் கைதட்டல்களும் விருதுகளும் அவனுக்கு இரண்டாம் பட்சமே.
‘உன்ன
தவிர அந்த கேரக்டர்ல நடிக்க யாருக்குமே தகுதி இல்ல!’ என்று அவனைச் சுற்றியுள்ள சக கலைஞர்கள்
அவனிடம் சொல்ல வேண்டும். அதுதான் அவனுக்கு கெத்து. இரண்டு வருடங்கள் அணியில் குப்பைக்
கொட்டியதற்காக யாரும் அதை எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். உண்மையில் அந்தத் தகுதியை
அவன் பெற்றிருக்க வேண்டும்.
நான்
நடிகனாக இரண்டு ஆண்டுகள் தவமிருந்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். சீனியர்ஸ்
அணியின் பொறுப்பை எங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள். மொத்தம்
பத்து பேர்கள் அணியின் சூப்பர் சீனியர்களாக இருந்தோம்.
பத்து
பேர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. எந்தவொரு முடிவையும் தனிப்பட்ட நபரின்
நலனுக்காக எடுக்கக் கூடாது என்றும் அணியின் நலனுக்காகவே அது இருக்க வேண்டும் என்றும்
எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆதலால், சிக்கலான சமயங்களில் முடிவெடுக்கும்
முன் அணியில் உள்ள அத்தனை பேருடனும் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுப்பது அவசியமாயிற்று.
இதில்
ஒரு பிரச்சனை இருந்ததை நான் மெல்ல மெல்ல தான் உணர்ந்தேன். எங்கள் அணியில் வட இந்தியர்கள்
அதிகம் இருந்ததால் ஒவ்வொரு முறையும் எடுக்கும் முடிவுகள் யாவுமே அவர்களுக்குச் சாதகமாகமே
அமைந்தது.
வெளிப்பார்வைக்கு
ஜனநாயக முறைப்படி தான் எல்லாம் நடக்கிறது என்று தோன்றும். ஆனால், நெற்றிக்கண்ணால் பார்த்தால்
தான் எல்லாமே திட்டமிட்ட நாடகம் என்ற உண்மை நமக்குப் புரியும். பெரும்பான்மையினர் தங்களுக்குள்
கேங் சேர்த்துக் கொண்டு சிறுபான்மையினரை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கதாப்பாத்திர
தேர்வில் தொடங்கி கைதட்டல் பெற்றுக் கொடுக்கும் வரை அனைத்திலும் அவர்கள் அரசியல் தான்.
நடுவர்கள்
நாடகங்களை மதிப்பீடு செய்வதில் ஒரு முறையைப் பின்பற்றினார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
ரியலிட்டி ஷோக்களில் வரும் நடுவர்களைப் போல விருப்பமான மதிப்பெண்களை அள்ளிக் கொடுக்கும்
முறை இங்கு இல்லை.
நடிப்பு,
இசை, நடனம், இயக்கம், ஒளி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கதை மற்றும் கைதட்டல் ஆகிய அனைத்தையும்
கொண்டே ஒரு நாடகத்தை மதிப்பீடு செய்வார்கள். கைதட்டல்களுக்கு எப்போதும் முழு மதிப்பெண்
கிடைத்துவிடும். காரணம் டிபார்ட்மெண்ட்டில் உள்ள அத்தனை மாணவர்களும் நாடகம் பார்க்க
வருவார்கள். தங்கள் டிபார்ட்மெண்ட் மாணவர்கள் நடிக்கும் போது மட்டுமே அவர்கள் கைதட்டுவார்கள்.
எவ்வளவு சுமாராக நாடகம் இருந்தாலும், ‘ஆஹா, ஓஹோ!’ என்பார்கள்.
இதுவே
மற்ற தியேட்டர் அணி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்வார்கள். இடையிடையே கமெண்ட் அடிப்பார்கள்.
நாடகம் பிரமாதமாகவே இருந்தாலும் இவர்கள் அதை அலட்சியம் செய்வார்கள். எனவே, கைதட்டல்
பெறுவதில் எங்களுக்குப் பஞ்சம் இருந்தது இல்லை.
கதை
சொந்தக் கதையாக இருந்தால் மட்டுமே கதைக்கான பிரிவில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். புத்தகத்தைத்
தழுவியோ சினிமாவைத் தழுவியோ நாடகம் போட்டால் நல்ல மதிப்பெண் கிடைக்காது. சிலப்பதிகாரத்தையே
அரங்கேற்றினால் கூட, சிங்கிள் மார்க் வருவது கடினம்.
இப்படியாக
மூன்று நடுவர்களின் தனித்தனி மதிப்பெண்களைக் கூட்டல் செய்து முடித்த பிறகே வெற்றியாளர்களை
அறிவிப்பார்கள்.
நடிப்பில்
மதிப்பெண் பெறுவது சுலபமானது இல்லை. தேர்ந்த நடிப்பை நடிகர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியே
ஆக வேண்டும்.
கதையை
முடிவு செய்த பிறகு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தைப் பற்றியும் இயக்குனர் விவரிப்பார். அந்த
விவரணையிலேயே நடிகர்கள் தங்களுக்கு ஏற்ற கதாப்பாத்திரம் எதுவென்று ஒருவாறு ஊகித்து
அறிந்து கொள்வார்கள். அந்தக் கதாப்பாத்திரத்தின் உடல்மொழியை கற்பனை செய்து கொண்டு ஆடிஷன்ஸில்
நடித்துக் காட்டுவார்கள். யார் சிறப்பாக நடிக்கின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கதாப்பாத்திரம்
கொடுக்கப் படும்.
ஆனால்,
எப்போதும் கதாநாயகன் வேடம் சூப்பர் சீனியருக்கே கிடைக்கும். திறமையும் அனுபவமும் ஒரு
பக்கம். சூப்பர் சீனியர் என்கிற கர்வம் மறுபக்கம். ஆணவமும் கர்வமும் அவன் கண்களை மறைத்துக்
கொள்வதால், தன்னைவிட சிறப்பாக நடிக்கும் நடிகர்களை அவன் அடையாளம் கண்டு கொள்ளத் தவறிவிடுவான்.
நானும்
ஒரு நாள் கதாநாயகப் பாத்திரம் ஏற்று மேடையில் நடிப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.
என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. கதாநாயக வேடத்தில் நடிக்க என்னைக் காட்டிலும்
வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று நான் ஆழமாக நம்பினேன்.
என்
சீனியர் ப்ரீத்தமின் சொற்கள் அந்நம்பிக்கையை மென்மேலும் வளர்த்தது. இரண்டாம் ஆண்டு
படிக்கும் போது ‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் கலந்து கொண்டு நடித்தேன். அப்போது ப்ரீத்தம்
தான் கதாநாயகனாக நடித்தான். நான் இரண்டாம் நிலை நாயகனாக நடித்தேன்.
எங்கள்
நாடகத்தில் ப்ரோலாக் எபிலாக் தவிர்த்து மொத்தம் ஐந்து காட்சிகள் இருந்தன. ப்ரோலாக்கில்
மேடையில் நான் ஒருவன் மட்டுமே நடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வசனம் ஏதும்
கிடையாது. உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்தும் காட்சி அது. பின்னணியில் ஒருவர் கதைக்களத்தையும்
என் கதாப்பாத்திரத்தைப் பற்றியும் விவரிப்பார். அதற்குத் தகுந்தாற் போல நான் உணர்ச்சிகளை
வெளிப்படுத்த வேண்டும்.
நான்
வெளிப்படுத்திய உணர்ச்சிகள் யாவும் பார்வையாளர்களை நாடகத்திற்குள் ஈர்த்து விட்டது.
கேர்ல் ஃப்ரண்ட்டுகளிடம் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட நாடகத்தில் கவனம்
செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரோலாக்
முடிந்ததும் முதல் காட்சி துவங்கியது. ப்ரீத்தம் முதன் முறையாக கதாநாயகனாய் நடித்தான்.
கம்பீரமான நடிப்பு அது.
வசனம்
பேசுவது மட்டுமே நடிப்பாகாது. நடிகனின் நடையையும் கை அசைவையும் வைத்தே அவன் நல்ல நடிகனா
இல்லையா என்பதைச் சொல்லிவிடலாம்.
போரில்
புறமுதுகு காட்டி ஓடுபவன் வீரன் அல்ல என்பார்கள். அது போலவே நடிகன் மேடையை விட்டு வெளியேறும்
வரையில் ஒருபோதும் தன் முதுகுப்புறத்தை பார்வையாளர்களுக்கு காட்டிவிடக் கூடாது.
வசன
உச்சரிப்பில் மூச்சை உள் இழுப்பதும் வெளியிடுவதும் மிக முக்கியமானது. பேசும் வசனமானது
பால்கனியின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் காதுகள் வரை எட்ட வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே இவை யாவும் கைகூடி விடாது. பொறுமையும், கவனமும் வேண்டும். ஜூனியர்ஸ்களுக்கு
கதாநாயகப் பாத்திரம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.
ப்ரீத்தமின்
நடிப்பில் ஒரு குறையும் தென்படவில்லை. அவனுடைய தேர்ந்த நடிப்பு எல்லோரையும் பிரமிக்க
வைத்தது. அவன் உச்சரித்த ஒவ்வொரு சொல்லும் எல்லோரையும் சென்றடைந்தது. அவன் உணர்ச்சிகள்
எல்லாம் பார்வையாளர்களை பாரபட்சமின்றி பாதித்தது.
அவசரமில்லாமல்
நிதானமாக நடித்தான். ஐந்து காட்சிகள் முடிவடைந்தன. சக நடிகர்களின் நடிப்பை முழுவதும்
மறக்கடித்துவிட்டு பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டான்.
இறுதியாக
எபிலாக் காட்சி. நானும் ப்ரீத்தம் மட்டுமே மேடையில் நடிக்கிறோம். எனக்கு இரண்டு பக்க
வசனம் இருந்தது. ப்ரீத்தமிற்கு ஒரு வசனம் கூட கிடையாது. என் சொற்களுக்கு அவன் ரியாக்ட்
செய்வதுடன் நாடகம் முடிவடைகிறது.
நான்
நடிக்கிறேன். இரண்டு மாதங்களாக நன்றாக ஒத்திகை பார்த்திருந்தேன். ப்ரீத்தம் தான் எனக்குப்
பயிர்ச்சி கொடுத்திருந்தான். கதாப்பாத்திரமாகவே நான் உருமாறி நடித்தேன். நான் மட்டுமல்லாது
நாடகம் பார்த்த எல்லோரும் அதை உணர்ந்தார்கள். நாடகம் முடிந்ததும் நடுவர்கள் உட்பட அனைவரும்
எழுந்து கைதட்டினார்கள்.
எங்களில்
யாருக்கு கைதட்டல்கள் கிடைக்கிறது என்று நான் குழம்பினேன். என் நடிப்பிற்கா அல்லது
ப்ரீத்தமின் நடிப்பிற்கா என்று தெரியவில்லை. கைதட்டல் கிடைக்கும் போது இருகரம் கூப்பி
நன்றி தெரிவிப்பது நடிகனின் கடமை. நான் ப்ரீத்தமைப் பார்த்தேன். அவன் நன்றி தெரிவிக்காமல்
வெறுமனே நின்று கொண்டிருந்தான்.
நான்
நன்றி தெரிவித்தால் கைதட்டல்கள் எனக்குத் தான் சொந்தம் என்று அர்த்தமாகி விடும். சீனியர்களின்
வெறுப்பை வேண்டுமென்றே சம்பாரித்துக் கொள்ள நான் விரும்பாததால் அசையாமல் நின்று விட்டேன்.
பின்,
ப்ரீத்தம் என்னைத் தனியாக அழைத்தான். “கலை! பொல்லாதவன் டா நீ! என்னையே தூக்கி சாப்பிட்டுட்டே!”
என்றான்.
”அதெல்லாம்
ஒன்னுமில்ல!” என்றேன் அடக்கத்துடன். ”அடுத்த வருசம் என் இடம் உனக்குத் தான்!” என்று
சொல்லி தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான். அன்று என் நடிப்பைப் பாராட்டிய அனைவரின்
தலைகளிலும் ஏறி நிற்பதைப் போல உணர்ந்தேன்.
நாங்கள்
சில மதிப்பெண் வித்தியாசத்தில் தோற்றுப் போனோம். எங்கள் அணியின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்
‘வெற்றியடையவில்லை! தோற்றுப் போகவுமில்லை!’
சூப்பர்
சீனியர்கள்,”வின் ஆர் லூஸ், இட் டஸிண்ட் மேட்டர் ஃபார் அஸ்” என்று ஜூனியர்ஸ் முன் சொல்லிவிட்டு,
எங்களிடம் தனியாக “நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது! அடுத்த வருசம் நாம ஜெயிச்சே ஆகனும்!”
என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
வெற்றி
பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மூன்றாம் ஆண்டில் சூப்பர் சீனியர்ஸ்களாக அடியெடுத்து
வைத்தோம்.
கதைக்
கருவை முடிவு செய்வதில் தொடங்கி எல்லாவற்றையும் நிதானமாகவும் மிகுந்த அக்கறையுடனும்
செய்து வந்தோம். இருந்தும் அவர்கள் அரசியல் இருக்கத்தான் செய்தது. நான் அதைத் தெரிந்தும்
தெரியாதவன் போல் காட்டிக் கொண்டேன். குறைகளைப் பெரிது படுத்தவும் இல்லை, தவறுகளைச்
சுட்டிக் காட்டவும் இல்லை. ஏனெனில், என் கனவு கதாநாயகன் பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே.
கதாப்பாத்திர
தேர்வுக்கான ஆடிஷன்ஸ் துவங்கியது. நடிகர்கள் எல்லோரும் மூன்று நிமிடங்கள் நடித்துக்
காட்ட வேண்டும். அதிலேயே யார் நன்றாக அந்தந்தப் பாத்திரங்களுக்குப் பொருந்துகிறார்கள்
என்று தெரிந்துவிடும். இயக்குனர் அவர்களைத் தேர்வு செய்வார்.
தேர்வு
செய்த பின், ‘யாருக்காவது இதில் ஆட்சேபனை இருக்கிறதா?’ என்று சம்பிரதாயமாக கேட்பார்.
ஆட்சேபனை இருந்தாலும் ‘இல்லை’ என்றே எல்லோரும் சொல்லப் பழகி இருந்தார்கள்.
நான்
ஆடிஷன்ஸில் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்தனர்.
ஒவ்வொருவரின் நடிப்பிலும் ஒவ்வொரு குறை கண்டேன். அவர்கள் என் கருத்தைக் கேட்ட போது,
‘இந்த வசனத்த இப்படிக் கொஞ்சம் பேசியிருக்கலாம். அந்த எக்ஸ்ப்ரெஷன இன்னும் கொஞ்சம்
வெளிப்படுத்தி இருக்கலாம்! இந்த இடத்தில உன் நடிப்பு கொஞ்சம் செயற்கையா இருந்துச்சு’
என்றெல்லாம் சொன்னேன்.
அதைக்
கேட்டுவிட்டு, ‘சீனியர்! எப்படியும் உங்க அளவுக்கு எங்கனால நடிக்க முடியாது!’ என்றார்கள்.
“ஒருத்தரோட பாடி லாங்குவேஜ் இன்னொருத்தருக்கு வராது. உன்ன மாதிரி என்னால நடிக்க முடியாது.
என் மாதிரி உன்னால நடிக்க முடியாது!” என்று சொல்லி மழுப்பினேன்.
ஏனென்றால்
என் மனதிற்குள் ஒரு குரல், ‘உங்க யாராலயும் என் நடிப்புக்கு பக்கத்துல கூட வர முடியாது’
என்று சொல்லியது.
ஆடிஷன்ஸ்
முடிவடைந்தது. இயக்குனர் தேர்வானவர்களின் பெயர்களைப் படிக்கையில் அவர்கள் எழுந்து நிற்பது
வழக்கம். மற்றவர்கள் கைதட்டி அவர்களைப் பாராட்டுவார்கள்.
எல்லோரும்
ஒன்றாக உட்கார்ந்திருந்தோம். இயக்குனர் படிக்கத் துவங்கினான். ‘கதாநாயகன் பாத்திரம்
– கலைச்செல்வன்’ என்று அவன் சொல்லியவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காக என் அருகில்
உட்கார்ந்திருந்தவர்களைச் சற்று விலக்கினேன்.
’கதாநாயகன்
பாத்திரம்…’ என்று சொல்லி அவன் நிறுத்தினான். என் அருகில் இருந்தவர்கள் என் தோளைத்
தட்டினார்கள். நான் எழுந்து நிற்கத் தயாரானேன். ஆனால், அவன் ‘முகுந்த்’ என்று சொல்லி
நிறுத்தினான்.
அவன்
விளையாட்டிற்காகச் சொல்கிறான் என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால், அதற்கான
அறிகுறிகள் அவன் முகத்தில் தென்படவில்லை. ‘ஒருவன் நடிக்கிறானா இல்லையா என்று என்னால்
சொல்லிவிட முடியாதா?’ அவன் நடிக்கவில்லை. உண்மையாகத் தான் சொன்னான்.
முகுந்த்
எழுந்து நின்றான். அவன் என்னைவிட ஒரு வயது இளையவன். என் ஜூனியர். எல்லோரும் கைதட்டினார்கள்.
என் முகம் இறுக்கமானதை மற்றவர் யாரும் கவனிக்கவில்லை. ஆனால், உண்மையில் நான் இயல்பாக
இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.
கதாநாயக
பாத்திரத்திற்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை பாத்திரம் எனக்குக் கிடைத்தது. எல்லோரும்
கைதட்டினார்கள். நான் எழுந்து நிற்கவில்லை. ’கம் ஆன் மேன். கெட் அப்’ என்றார்கள். இதற்கு
மேல் ஒரு அவமானம் நடிகனுக்குக் கிடையாது என்று தோன்றியதால் நான் எழவில்லை.
ஒரே
தருணத்தில் முகுந்த் என்ற நடிகனுக்கு பெருமிதமும் எனக்கு அவமானமும் கிடைத்தது. நடிகர்களுக்கு
கைதட்டல்கள் தான் ஆங்கீகாரம். ஆனால், அன்று எனக்கு கிடைத்த கைதட்டல்களோ என்னை இழிவுபடுத்தின.
பேசாமல்
அமைதியாக இருந்துவிட்டேன். சட்டென்று எனக்குப் ப்ரீத்தமின் ஞாபகம் வந்தது. அரங்கத்தில்
அன்று கிடைத்த கைதட்டல்களை ப்ரீத்தம் ஏன் ஏற்காமல் நின்றான் என்று புரிந்தது.
அது
எனக்குக் கிடைத்த கைதட்டல்கள் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அது உண்மையாக கூட
இருந்திருக்கலாம். அதை ஏற்பது பிச்சை எடுப்பதற்குச் சமம். என் உடல் கூசியது.
”முகுந்த்தை
ஏன் தேர்ந்தெடுத்தன்னு நான் உன்ன கேட்கல. என்னை ஏன் தேர்ந்தெடுக்கலன்னு நான் கேட்குறேன்!”
என்று இயக்குனரிடம் கேட்டேன்.
“உன்
அளவுக்கு அவனால நடிக்க முடியாது. நடிப்புல உன் கூட போட்டி போடுறதுக்கு அவனுக்குத் தகுதியே
இல்ல! ஆனா, இந்தக் கேரக்டர்ல அவன் நடிச்சா ரொம்ப இயல்பா இருக்கும். ஏன்னா, இந்தக் கேரக்டரோட
குணத்துக்கும் அவனோட குணத்துக்கும் சின்ன வித்தியாசம் கூட இல்ல. இதுவே, நீ உயிர கொடுத்து
நடிச்சாலும் அதுல கொஞ்சம் செயற்கைத்தனம் வெளிப்பட்ரும்.” என்றான்.
“என்
நடிப்பு செயற்கையா இருந்தா தான் என்ன இப்போ? ஆடியன்ஸ் கண்ணுக்குத் தெரியவா போகுது?”
என்று திமிராக கேட்டேன்.
“அவங்க
கண்ணுக்கு தெரியலைன்னா பரவால்ல. என் கண்ணுக்கு அது தெரியக்கூடாது!” என்று பதிலளித்தான்.
நடிகனாய் நான் சொல்லியிருக்க வேண்டியதை இயக்குனராய் அவன் சொல்லிவிட்டான்.
நான்
அணியை விட்டு வெளியேறினேன்.
‘போனா
போகுதுடா! வா! நீயே வந்து அந்த கேரக்டர்ல நடி. முகுந்த் கிட்ட பேசிட்டோம். அவன் சரின்னு
சொல்லிட்டான்’ என்று என்னிடம் கேட்டுப் பார்த்தார்கள்.
நான்
சம்மதிக்கவே இல்லை. ‘அவன் தான் நல்ல நடிகனாச்சே! போய் அவனையே மேடைல ஏத்தி அழகு பாருங்க!’
என்று சொல்லிய பின், என்னிடம் வருவதை நிறுத்திக் கொண்டார்கள்.
’உன்ன
தவிர அந்த கேரக்டர்ல நடிக்க யாருக்குமே தகுதி இல்ல!’ என்று முகுந்த்திடம் நிச்சயம்
அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஏனென்றால், அதுவே ஒரு நடிகனை ஊக்கப்படுத்தும் மருந்து
என்று அவர்களுக்குத் தெரியும்.
நான்
அணியில் இல்லாததை நினைத்து கவலைப்படுபவர்கள் ஒருவர் கூட இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
என் முக்கியத்துவத்தை யாரும் உணரவில்லையோ என்று தோன்றியது. நான் இல்லையென்றாலும் நன்றாகத்
தான் அணி செயல்பட்டது.
என்னை
இழந்ததற்காக அவர்களை வருத்தப்பட வைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ‘அரங்கேற்றம்
தியேட்டர் புரொடக்ஷன்ஸ்’ என்று புதிதாக ஒரு அணியைத் துவங்கினேன்.
”இப்ப
எதுக்கு தேவையில்லாம டிபார்ட்மெண்ட்டுக்கு இரண்டாவது டீம்?” என்று ஹெச்.ஓ.டி. கேட்டார்.
நான் விளக்கம் கொடுக்கவில்லை. அவர் மறுத்தால் டிபார்ட்மெண்ட்டின் துணையில்லாமல் தனியாக
செயல்படலாம் என்று தீர்மானித்திருந்தேன். அவர் மறுத்துவிட்டார்.
எங்கள்
டிபார்ட்மெண்ட் மட்டுமின்றி அனைத்து டிபார்ட்மெண்ட் தியேட்டர் அணிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்களைச்
சேர்த்துக் கொண்டேன். கணக்கில்லாமல் வந்தார்கள். நானும் வருபவர்கள் எல்லோரையும் ஆடிஷன்ஸ்
வைக்காமல் சேர்த்துக் கொண்டேன்.
ஒத்திகைக்கு
தவறாமல் வருபவர்களுக்கு மட்டுமே மேடையில் நடிக்க வாய்ப்பு தருவேன் என்று தீர்க்கமாகச்
சொல்லிவிட்டேன். அதன்படியே வாய்ப்பளித்தேன். என் அணியை ஆரம்பித்த புதிதில் மற்ற அணிகளின்
ஏளனப் பேச்சுக்கள் என் காதில் விழுந்தன. நான் அதைப் பொருட்படுத்தவில்லை.
மற்ற
தியேட்டர் அணிகளின் நாடகத் தரத்திற்கு ஈடாக என் நாடகமும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால், எல்லோரிடமும் மிகக் கடுமையாக வேலை வாங்கினேன்.
என்னைத்
தவிர மற்ற எல்லோரும் முதன்முறையாக மேடை ஏறி நடிக்கிறார்கள். அவர்களின் அனுபவமின்மை
பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதை மனதில் கொண்டு நடிகர்கள் அனைவருக்கும்
நானே பயிற்சி கொடுத்தேன். ஒரு காட்சியைக் குறைந்தபட்சம் முப்பது முறை ஒத்திகை பார்த்திருப்போம்.
முழு
ஒத்திகையின் போது எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
பயிற்சி அளித்திருந்தேன். அவர்களது நடிப்பை ஒருசேர பார்க்கையில் தான் நான் செய்த தவறை
உணர்ந்தேன். எல்லோரும் என்னைப் போலவே நடித்தார்கள். என் நடிப்பைப் பிரதிபலித்தார்கள்.
நான்
நடித்துக் காட்டி பயிற்சி அளித்தது தவறாகப் போய்விட்டது. ஒரே விதமான உணர்ச்சி, உச்சரிப்பு
மற்றும் உடல்மொழி அனைத்து நடிகர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.
மீதமிருந்த
மூன்று நாட்களுக்குள் என்னால் இயன்றவரை அவர்களின் தனித்துவ நடிப்பைக் கொண்டு வர முயற்சித்தேன்.
’தி
சீக்ரெட் ஃபேஸ் ஆஃப் அன் ஆக்டர்’ என்பதே எங்கள் நாடகத்தின் தலைப்பு. கதாநாயகப் பாத்திரத்தில்
நான் நடித்தேன். புதிய அணி என்பதால் மாணவர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அவர்களின்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது நாடகம் அமைந்தது.
ட்ரீம்
பிக்’ தியேட்டர் அணியின் நாடகத்தைப் பார்த்தேன். முகுந்த் நன்றாகவே நடித்திருந்தான்.
நேரில் சந்தித்துப் பாராட்டினேன். ‘என் இடம் உனக்குத் தான்’ என்று ப்ரீத்தம் எனக்குச்
சொல்லியது போல் அவனிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. ஆனால், சொல்லாமல் திரும்பிவிட்டேன்.
அவர்கள்
வெற்றி பெற்றுவிட்டார்கள். நாங்கள் தோற்றுவிட்டோம். என் அணியில் உள்ளவர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக நான் கேட்டுச் சலித்த எல்லா பொய்களையும் முதன்முறையாக அவர்களிடம் சொன்னேன்.
அவை யாவும் பொய்கள் இல்லையோ என்று எனக்குத் தோன்றியது.
என்
நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். “அடுத்த வருசம் நான் நாடகம் பார்க்க
வருவேன்! நீங்க தான் நம்ம டீம ஜெயிக்க வெக்கனும்!” என்று சொன்னேன். அவர்களும் ‘நிச்சயமா
நாங்க ஜெயிப்போம்!’ என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஒரு
வருடம் கழிந்தது. அணி பற்றி எனக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. என்னை யாரும் தொடர்பு
கொள்ளவுமில்லை. ’இண்ட்ரா காலேஜ்’ போட்டி நடக்கையில் நான் கல்லூரிக்குச் சென்றிருந்தேன்.
அரங்கேற்றம்
அணி எப்போதோ கலைந்துவிட்டது என்று கேள்வி பட்டேன். என் ஜூனியர்களை அழைத்துப் பேசினேன்.
”நாங்க ட்ரை பண்ணோம். யாருக்கும் பெருசா இண்ட்ரஸ்ட் இல்ல. எல்லாரும் ஒவ்வொரு காரணத்த
சொல்லி வெளிய போயிட்டாங்க!” என்றனர். நான் மேற்கொண்டு அவர்களிடம் பேசவில்லை.
‘ட்ரீம்
பிக்’ தியேட்டர் அணி அரங்கேறத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தம் வந்திருந்தான்.
அவனுடன் சேர்ந்து நாடகம் பார்க்கச் சென்றேன்.
ட்ரீம்
பிக்’ அணி அதே உயிர்ப்புடன் இருந்தது. நல்ல நாடகம் பார்த்த திருப்தி ஏற்பட்டது. எல்லோரும்
சிறப்பாக நடித்திருந்தார்கள். புதிதாகச் சேர்ந்திருக்கும் ஜூனியர்ஸ்களை நானும் ப்ரீத்தமும்
சந்தித்துப் பாராட்டினோம்.
விடைபெறும்
தருணத்தில் ப்ரீத்தம் என்னைத் தனியாக அழைத்தான்.
”ஒருத்தர
மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட டீம் என்னைக்குமே நிலைக்காது. போன வருசம் நீ நடத்துன நாடகத்த
பத்தி எல்லாரும் சொன்னாங்க. நீ யாரு உன் திறமை என்னன்னு எல்லாருக்கும் காட்டிட்ட! ஆனா,
உன் தனித்திறமைய காட்டுறதுக்கு நீ ஒருத்தன் மட்டுமே போதும். அதுக்கு ஒரு டீம் அவசியம்
இல்ல!” என்றான் ப்ரீத்தம்.
”அதிகாரத்துல
இருக்குறவங்களோட விருப்பத்த நிறைவேற்த்த தான் உன் மொத்த டீமும் செயல்பட்டுது. ஆனா நான்,
என் டீம்ல உள்ள ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன்!”
என்று நான் சொன்னேன்.
”கலை!
எங்களோட விருப்பத்த மொத்த டீமோட விருப்பமா மாத்துறதுல தான் எங்க வெற்றி இருக்கு. நாங்க
ஒன்னும் சும்மா பேசல. ஜெயிச்சு நாங்க யாருன்னு நிரூபிச்சிட்டுப் பேசுறோம்!” என்றான்
அழுத்தமாக.
”அப்பறம்
ஏன் போட்டில ஜெயிக்குறது முக்கியமில்ல, நாம ஆடியன்ஸுக்காகத் தான் நாடகம் போடுறோம்னு
ஜூனியர்ஸ் முன்னாடி நடிக்கிறிங்க?” என்று கேட்டேன்.
“நாடகம்
ஆடியன்ஸுக்காகத் தான் போடுறோம். ஆனா, நாம ஜெயிச்சா தான் டீம் செயல்படும். இல்லன்னா
நம்ம பேச்ச நம்ம டீம்ல இருக்குறவங்களே கேட்க மாட்டாங்க! புரிஞ்சுதா?” என்று கேட்டான்.
”புரிந்தது” என்றேன்.
No comments:
Post a Comment